என் மலர்
கதம்பம்

தடைகளை தகர்த்த சஷ்டி கவசம்
- ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை.
- ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்..
இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண், தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து பல கிராமபோன் ரிகார்டு [இசைத்தட்டு] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்...
ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்.
அவர்கள் சொன்ன ஒரே காரணம்... 'ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை...வேண்டாம் இந்த வீண்வேலை.... விட்டு விடுங்கள்..'
விடவில்லை அந்த சகோதரிகள்..
இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும் கீறல் விழுந்த இசைத்தட்டாக "முடியாது "என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்...
ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்...
முதலில் 'ஆபேரி'.. அடுத்து 'சுப பந்துவராளி'.. அதனைத் தொடர்ந்து 'கல்யாணி.'. இறுதியாக 'தோடி'.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை...!
ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்..
ஆனால்.... அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது.
இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் சூலமங்கலம் சகோதரிகள் !
அந்தப் பாடல் கந்த சஷ்டி கவசம்...
"சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்.."
கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை...!






