என் மலர்
கதம்பம்

இந்தியா வந்த கடிகாரம்!
- இந்தியர்களுக்கு வாட்ச் தயாரிக்கத் தேவையான பயிற்சியையும் அளித்தது.
- டிஜிடல் கடிகாரம் என பலவற்றையும் அறிமுகம் செய்தது.
இன்று ஒவ்வொரு வீட்டிலும் எத்தனையோ கைக்கடிகாரங்கள் இருக்கலாம். நேரத்தைக் காட்டுவதோடு பல தகவல்களைத் தரக்கூடிய ஸ்மார்ட் வாட்சுகள் இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் வாட்ச் என்பது மிகப்பெரிய ஆடம்பரம்.
டைம்-பீஸ் எனப்படும் கடிகாரங்கள்கூட மிகச்சில வீடுகளில்தான் இருந்தன. ஆலைகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தந்த ஷிஃப்ட் நேரத்துக்கு சங்கு ஒலிக்கும். பல நகராட்சிகளிலும் நேரத்தை அறிவிக்க சங்கு ஒலிக்கும்.
ஒரு முறை பிரதமர் நேருவுக்கு ஒரு ஸ்விஸ் கைக்கடிகாரம் பரிசளிக்கப்பட்டது. இது போன்ற வாட்சை இந்தியாவில் தயாரிக்க முடியுமா என்று அவர் விசாரித்தபோது நமட்டுச் சிரிப்புதான் பதிலாக வந்தது.
அதற்குப் பின் நேருவின் அரசு ஜப்பானின் சீக்கோ நிறுவனத்திடம் வாட்ச் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற முயற்சித்தது. அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சீக்கோவின் போட்டி நிறுவனம் சிட்டிசன் இந்தியாவுக்கு உதவ முன் வந்தது. சிட்டிசன் நிறுவனம் தொழில்நுட்பத்தை அளித்ததோடு நின்று விடாமல் இந்தியர்களுக்கு வாட்ச் தயாரிக்கத் தேவையான பயிற்சியையும் அளித்தது.
இதன் விளைவாக, 1961ஆம் ஆண்டு பெங்களூரில் HMT நிறுவனத்தில் வாட்ச் தயாரிக்கும் பிரிவு துவக்கப்பட்டது. அந்தப் பிரிவைத் துவக்கி வைத்தவர் நேரு. அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் 1963இல் HMTயின் முதல் தயாரிப்பான HMT Janata வாட்ச் விற்பனையையும் துவக்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் கைக்கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான எச்எம்டி இந்தியாவின் கைக்கடிகார சந்தையில் கோலோச்சியது. சாவி கொடுக்கும் கடிகாரங்களை அடுத்து ஆட்டோமேடிக் கடிகாரங்கள் வந்தன. அடுத்து முதல் பிரெயில் கடிகாரம், முதல் குவார்ட்ஸ் கடிகாரம், முதல் அனலாக்-டிஜிடல் கடிகாரம் என பலவற்றையும் அறிமுகம் செய்தது.
-ஆர். ஜாஜஹான்






