search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    திருப்தியே நிம்மதி
    X

    திருப்தியே நிம்மதி

    • குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
    • குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

    நம் அன்றாடும் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகளுக்கு மூலகாரணம் பேராசையும், அது நிறைவேறாமல் போனால் ஏற்படும் ஏமாற்றமும், துயரமும் தான் காரணம்..

    இதில் சிக்காமல் இருப்பதற்கு ஒரே வழி நம்மிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தி அடைவதே சாலச் சிறந்தது..

    குருவிடம் வந்தான் ஒருவன்.

    ''குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு'' என்றான் வந்தவன்.

    ''அப்படியா?''

    ''ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆனந்தமாக இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.''

    குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

    ''இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று சொல்'' என்றார்.

    குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.

    ''குருவே, அவன் நிம்மதியே போச்சு.''

    ''அப்படியா, ஏன்? அவனுக்குத் தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...''

    ''அதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகி விட்டான்.

    ஆனால், ஒன்பது காசுகள் தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான்.

    வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.''

    ''இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும் புரிகிறதா?'' என்றார் குரு.

    இருப்பதை வைத்து திருப்தி கொள்வதும், இல்லாதை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனம் உடையவர்களே உண்மையில் பணக்காரர்கள்.

    ஆம்., 'கிடைப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும்.."

    -மனோகர் ராஜா

    Next Story
    ×