search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஆறுவது சினம்...
    X

    ஆறுவது சினம்...

    • முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர் இருந்தார்.
    • அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றபடி இருப்பார்.

    அவ்வையார் எளிதாக எழுதிய வைத்துச் சென்றுவிட்டார். சினம் கொள்ளாமல் இருந்து விட முடிகிறதா? முடியவில்லையே!

    "தீராக் கோபம் போதாய் முடியும்" என்பது முதுமொழி.

    ஆண்களுக்கு எளிதாக சினத்தைக் காட்டும் இடம் மனைவிதானே!

    மனைவி மட்டும் தான், "இது இப்படி தான், முதலில் பாயும் அப்புறம் பதுங்கும்" என்று நினைத்து அமைதி காப்பவர்.

    தலைமை ஆசிரியர் என்னை அழைத்துச் சினந்தார். "உங்களால் தான் பள்ளிக்கூடமே கெடுகிறது. மாணவர்களை அடக்கவே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் ஏன் வாத்தியாரா வந்தீங்க?" என்றெல்லாம் கூறி, யார் மேலோ உள்ள கோபத்தை என்னிடம் வெளிப்படுத்தினார்.

    அவர் அப்படிப் பேசலாம். நான் அவரிடம் அவ்வாறு பேச முடியுமா? அமைதியாக வீடு வந்தேன்.

    மனைவி காப்பி ஆற்றியவாரே வந்தார். நான் வாங்கிய வசவை யாரிடமாவது கொட்டியாக வேண்டுமே!

    "காப்பியாடி இது..? கழனித்தண்ணி மாதிரி இருக்கு!" என்று சீறினேன்.

    என் மனைவி புரிந்து கொண்டார். "இது எங்கேயோ வாங்கினதை இங்கே வந்து இறக்கி வைக்குது" என்று பக்குவமாகக் கேட்டார்.

    "ஏங்க.. உங்க எச்.எம். ஏதாவது திட்டிட்டாரா?"

    புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நடந்ததை விவரமாகக் கூறி மனச்சுமையை இறக்கினேன்.

    ஆண் நெருப்பு என்றால் பெண் தண்ணீர். ஆம், நான் நெருப்பாகச் சுட்ட போது, என் மனைவி தண்ணீராக மாறி அதை அணைத்தார்.

    கொள்ளிக்கட்டையின் மீது நீரை ஊற்றினால், சுறுசுறுவென்று சத்தம் வரும். கூடவே கொஞ்சம் புகையும் வரும்.

    அதனால் தான் அடுத்த வீட்டுக்காரர், "பக்கத்து ஊட்டுல என்னா புகையுது?" என்று அவர் மனைவியிடம் கேட்கிறார். இதனால் தான் நெருப்பை "அக்னி பகவான்" என்று ஆணாக்கிக் கூறுகிறார்கள்.

    காவிரி கங்கை ஆறுகளை, "காவிரி அன்னை" என்று பெண்ணாக்குகிறார்கள். "கங்கா மாதா" என்று நெகிழ்கிறார்கள்.

    முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர் இருந்தார். அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றபடி இருப்பார்.

    முல்லா வேலைக்காரர் திருடிச் செல்வதை அறிந்து கொண்டார். ஆயினும் அவரிடம் கோபமாகப் பேசாமல் நயமாகவே திருத்த நினைத்தார்.

    ஒவ்வொன்றாக நிறையப் பொருளை எடுத்துப்போய் விட்டார். கடைசியாக ஒரு நாள் ஒரு தம்ளரை எடுத்து மறைவாக மடியில் கட்டிக் கொண்டு, முல்லாவிடம் விடைபெற்று வீடு சென்றார். அவர் பின்னாலயே முல்லாவும் பணியாள் வீட்டுக்குச் சென்றார்.

    வீடு சென்ற பணியாள் திரும்பிப் பார்க்கிறார், முல்லாவும் பின்னாலயே வருகிறார்.

    "முல்லா நீங்க எங்கே வாரிங்க?" என்றார் வேலைக்காரர்.

    "நானும் உங்க வீட்டுக்கே வந்துடறேனே" இது முல்லா.

    "ஏன் முல்லா இப்படிச் சொல்றீங்க?"-வேலையாள்

    "வேற என்னப்பா? என் பொருளெல்லாம்தான் இங்கே வந்துட்டு, நான் மட்டும் அங்கே இருந்து என்ன செய்யப்போறேன்? நானும் வந்துடறேன். அதான் வந்துட்டேன்"

    முல்லா இவ்வாறு கூறியதைக் கேட்டதும் வேலைக்காரர் வெட்கப்பட்டுத் தலைகுனிந்தார்.

    கோவமாகப் பேசி இருந்தால், வேலைக்காரர் தலைகுனிவாரா?

    ஒரு திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கே.யும் மதுரமும் கணவன் மனைவியாய் நடிப்பார்கள்.

    பல ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை. ஒரு நாள் கலைவாணர் சினத்துடன் சொல்வார், "பத்துவருசமாப் புள்ளை இல்லே. வேற கல்யாணம் பண்ண வேண்டியது தான்."

    மதுரம் சொல்லுவார், "புள்ளை இல்லேன்னா என்னாங்க? கல்யாண எல்லாம் வேணாங்க"

    கலைவாணர்,"அதலெல்லாம் முடியாது, வேற கல்யாணம் பண்ணியே ஆகனும்" என்று பிடிவாதம் பிடிப்பார்.

    மதுரம் கடைசியாகச் சொல்லுவார், "நான் வேணாம் வேணாம்னு சொல்லுறேன். நீங்க என்ன கேட்க மாட்டேங்கறீங்க. சரிங்க நீங்களே சொல்றீங்க, வேற என்ன செய்றது? நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க. கல்யாணம் பண்ணிடலாம்" என்றதும் கலைவாணர் கலங்கி நிப்பார்.

    இது வெறும் சிரிப்பு மட்டுமா? சிந்திக்க வேண்டிய செய்தி. சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. சினம் தவிர்ப்போம் சிறக்க வாழ்வோம்!.

    -புலவர் சண்முகவடிவேல்

    Next Story
    ×