என் மலர்
கதம்பம்

அசைவ பிரியர்கள் கவனத்திற்கு..
- தொடர்ச்சியான அசைவ உணவுகள், நாட்பட்ட செரிமான சிக்கலை உருவாக்கும் என்பது உறுதியான ஒன்று.
- வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அசைவம் விருப்பமான உணவாக இருக்கும்.
தென் தமிழ்நாட்டு அசைவ உணவுப் பிரியர்கள், அசைவ உணவுடன் வேறெந்த காய்களையோ, கீரைகளையோ சேர்த்து உண்ணுவதைத் தவிர்த்து வருவது மிகப் பரவலாகி வருகிறது. இது கவனிக்க வேண்டிய விஷயம்.
வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அசைவம் விருப்பமான உணவாக இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன், நண்டு, இறால், முட்டை..... இன்னும் என்ன என்ன அசைவம் இருக்கிறதோ அத்தனையும் செய்து விடுகிறார்கள்.
இது இப்போது சாதாரண நாட்களில் கூட நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், இந்த அசைவப் பிரியர்கள், காய்கள், கீரைகள், பழங்களையும் சரியாக சாப்பிடுவது கிடையாது.
இது போன்ற தொடர்ச்சியான அசைவ உணவுகள், நாட்பட்ட செரிமான சிக்கலை உருவாக்கும் என்பது உறுதியான ஒன்று. நெஞ்செரிச்சல் தொடங்கி வயிறு, குடல் தொடர்பான புண் முதல் புற்றுநோய் வரை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் இது.
இதைத் தவிர்த்து விடுதல் நலம். அதற்குப் பதிலாக..... சாம்பார், கூட்டு, காரக் குழம்பு, வேறெந்த காய் வகைக் குழம்புகள் செய்யும்போது, அசைவ உணவுகளை பக்க உணவுகளாகவும், கறிக் குழம்பு, மீன்குழம்பு, நண்டுக் குழம்பு இறால் தொக்கு என்று செய்யும்போது கீரைப் பொரியல், காய்கள் பொரியல், அவியல், என்று தாவர வகைப் பக்க உணவுகளையும் சேர்த்துக் கொண்டால், செரிமானம் எளிதாகி விடுவதுடன், அதிகக் கொழுப்பு, அதனால் உருவாகும் நச்சுப் பொருட்கள் போன்றவை மறுநாளே எளிதாக வெளியேறி விடும்.
மிகக் குறிப்பாகத் தொற்றாவகை நோய்களைக் கொண்டவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால், நோய் கட்டுப் பாட்டிற்குள் இருப்பதுடன், நோய் ஏற்படும் சூழலில் இருப்பவர்களுக்கு தவிர்க்கப்படலாம்.
இனிமேல் இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ..சமையல் செய்யும் இல்லத்தரசிகள்....
- வண்டார் குழலி






