search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    புதுமாப்பிள்ளைகளுக்கு வெற்றிலையின் மகத்துவம் தெரியுமா?
    X

    புதுமாப்பிள்ளைகளுக்கு வெற்றிலையின் மகத்துவம் தெரியுமா?

    • வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது.
    • இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    வெற்றிலை போடும் பழக்கத்தை பாட்டி காலத்து பழக்கம் என்று இன்றைய இளம் தலைமுறை ஒதுக்கி தள்ளிவிட்டது. ஒரு காலத்தில் சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் என்பது நமது தாத்தா, பாட்டிகள் மத்தியில் தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்தது. வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். என்ன சாப்பிட்டாலும் செரிமானமாக்கி விடும் என்பதை அறியாமல் அடுத்த தலைமுறை அதனை முற்றிலுமாக கைவிட்டு விட்டது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை நாகரீக போர்வைக்குள் இன்றைய இளம் தலைமுறை மறைத்துக்கொண்டு உள்ளது.

    சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தாம்பூலம் வைக்கும் பழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த தாம்பூல பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு இருந்தால் மட்டுமே அது முழுமை அடையும். தாம்பூலமாக அமையும். இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கட்டுக்கட்டாக வெற்றிலைகளை வாங்கி அதனை தாம்பூல பைகளில் போட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

    வெற்றிலை போடும் பழக்கம் எப்படி மறைந்து போனதோ அதே போன்று தாம்பூலப் பைகளில் வெற்றிலை போட்டுக்கொடுக்கும் பழக்கமும் மாறத் தொடங்கி இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் பெருகி வரும் கலாச்சார மோகத்தால் வாய் மணக்கும் பயிரான வெற்றிலையை கொஞ்சம் கொஞ்சமாக நாம் மறந்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தற்போது தாம்பூல பைகளில் மணக்கும் வெற்றிலைக்கு பதில் பிளாஸ்டிக் வெற்றிலைகள் போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது. இதன் காரணமாக வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் வாழை இலைக்கு பதில் பேப்பர் இலைகளை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வரும் காலத்தில் வாய் மணக்கும் வெற்றிலைக்கு பதில் பிளாஸ்டிக் வெற்றிலைகள் சுப நிகழ்ச்சிகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறார்கள் வெற்றிலை வியாபாரிகள்.

    இதற்கு முடிவு கட்டும் வகையில் பிளாஸ்டிக் வெற்றிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறை வெற்றிலையை மறந்து வரும் நிலையில் எத்தனை புது மாப்பிள்ளைகளுக்கு தெரியும் அந்த வெற்றிலையின் ரகசியம் என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் இன்றைய இளம் தலைமுறை வாலிபர்கள் திருமணத்துக்கு பிறகு இல்லற வாழ்வில் சறுக்கி வருகிறார்கள்.

    இளம் வயதிலேயே ஏற்படும் தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் சவர்மா உள்ளிட்ட சிக்கன் உணவு வகைகள் போன்றவற்றால் ஆண்மை குறைவு ஏற்படுவதாக டாக்டர்களும் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்மை குறைவுக்கு வெற்றிலை அருமருந்து என்பது இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியாத ஒரு உண்மையாகும். வெற்றிலையை அடிக்கடி மென்று சாப்பிட்டு வருவதன் மூலம் வயாகராவுக்கு இணையான சக்தியை பெற முடியும் என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.

    எனவே இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதை சாப்பிட்டாலும் செரிக்கும் தன்மையை வளர்க்க உதவும். அதே நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் வெற்றிலைக்கு விடை கொடுத்து மணக்கும் வெற்றிகளை பயன்படுத்த வேண்டும் என்பதே வெற்றிலை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி இல்லற இன்பத்துக்கு வழி வகுக்கும் வெற்றிலையின் வேறு மகத்துவங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

    வெற்றிலை போட்டால் வாய் மணக்கும். நல்ல மதிய உணவு விருந்துக்குப் பின் வெற்றிலை பரிமாறுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம். வெற்றிலையில் பல நம்ப முடியாத நல்ல விஷயங்கள் உள்ளது. முன்பெல்லாம் கோவில் பூஜைகள் முதல் மருந்துகள் வரை வெற்றிலையை பல விதமாக உபயோகித்து வந்துள்ளோம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.

    இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

    வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.

    வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சினை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சினைகள் குணமாகி வரும். ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.

    கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது. நமது உடலில் சுரக்கும் 24 விதமான "அமினோ அமிலங்கள்" வெற்றிலையில் உள்ளன. இந்த "அமினோ அமிலங்களை" வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் "தாம்பூலம்" தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    காலையில் வெற்றிலை, பாக்கு போடும்போது பாக்கின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு, மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக் கூடியது. மதியம் வெற்றிலை, பாக்கு போடும்போது சுண்ணாம்பின் அளவை சற்று அதிகரித்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.

    இரவில் வெற்றிலை கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும்.

    வெற்றிலைக்கு அரச இலை, மாவிலை போன்று தெய்வீக சக்தி உண்டு. கண்களுக்கு தெரியாத பொருளை மைபோட்டு பார்ப்பது, வசியம் செய்வது போன்றவற்றிற்கும் வெற்றிலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

    வெற்றிலைக்கு செல்வத்தின் தலைமகளாக உள்ள மகாலட்சுமியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. மேலும் தீய கர்ம வினைகளையும் இந்த வெற்றிலை அழிக்கும். செல்வமின்மையும் நமது மோசமான கர்மா தான் இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வெற்றிலையை பயன்படுத்தலாம்.

    அந்தக் காலத்தில் மூன்று வேளைகளுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவதென்பது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. படிக்காதவர்கள் செய்யும் செயல் போல பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளில் அதிகமாக வெற்றிலை தோட்டம் உள்ளது. குறிப்பாக நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளிலும் தேனி, சேலம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கு இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

    Next Story
    ×