என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
- மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.
- உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.
நோய்களில் 70% மனம் சம்பந்தப்பட்டவை தான்.
ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும்.
ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்.
நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்.
மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.
உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.
உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.
உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது..
சில நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது..
உங்கள் மனம்தான் உங்கள் உலகம்.
உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.
உங்கள் மனம்தான் உங்கள் நோய்.
நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்..
அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.
அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.
உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.
உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.
உடலும் மனமும் இரண்டல்ல..
உடலின் உள்பகுதி தான் மனம்.
உடல், மனத்தின் வெளிப்பகுதி.
உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள் நுழைய முடியும்.
அது மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.
-ஓஷோ
- ஆயுள் விருத்தியும், செல்வ வளத்தையும் அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.
- சித்திர குப்தரை சிந்தையில் நிறுத்தி வழிபட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததுதான் ஆனால் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி மிகச்சிறப்பு வாய்ந்தது!
தமிழ் மாதத்தில் முதல் மாதம் சித்திரை!சூரியன் உச்சம் பெறும் மாதம் சித்திரை!!இந்த சித்தரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடிய திருநாளே சித்ரா பவுர்ணமி.
மற்ற எந்த மாதங்களில் வரும் பவுர்ணமியை விட சித்ரா பவுர்ணமி அன்று சந்திரன் எந்நவித கலங்கமும் இல்லாமல் அவ்வளவு பிரகாசமாக இருப்பார்.
இந்த சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை வழிபடுவதால் உங்கள் பாவக்கணக்குகள் குறைந்து புண்ணிய கணக்குகள் அதிகமாகும். மேலும் ஆயுள் விருத்தியும், செல்வ வளத்தையும் அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.
சித்ரா பவுர்ணமி அன்று விரதமிருந்து வாசலில் மா கோலமிட்டு,பொங்கல் வைத்துவாழை இலை இட்டு அதில் பொங்கலோடு முக்கனிகளை பரப்பி அதனோடு எல்லா காய்கறின் கூட்டும், பால் பாயசமும் படைத்து. சித்திர குப்தரை சிந்தையில் நிறுத்தி வழிபட வேண்டும்.
இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.
தெரியாமல் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும்.
சித்ரா பவுர்ணமி அன்று கல்வி பயிலும் வசதி இல்லாத மாணவ செல்வங்களுக்கு நோட்டு, பேனா வாங்கி கொடுப்பது சிறப்பாகும்.
ஜோதிட ரீதியாக சித்ரா பவுர்ணமி வழிபாடு மிகச்சிறந்த பரிகாரமாகும்.
மனதுக்கு காரகன் சந்திரன்!நல்ல எண்ணம், நல்ல மனநிலை, தாயாரின் நிலை, தனம் இவற்றை அருளக்கூடியவர் சந்திரன்.
சந்திரபகவானின் அருள் பெற சித்ரா பவுர்ணமி விரதம் கடை பிடிப்பது மிகச்சிறப்பானது. இதனால் மனமும், எண்ணமும் சிறப்படையும், பொருளாதார மேன்மை கிடைக்கும். அதே போல் தாயாரின் உடல் நலம் மேம்படும்.
குறிப்பாக மன சஞ்சலம் கொண்டவர்கள், மன சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சித்ரா பவுர்ணமி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
அதே போல் பெண்கள் இந்த விரதத்தை கடை பிடித்தால் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றியதற்கு சமமான பலன் கிடைக்கும்.மாங்கல்ய பலம் பெறும் நாள்.
சித்திரை நட்சத்தின் அதிபதி செவ்வாய். இந்த சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்ரா பௌர்ணமி அன்று சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.
செவ்வாய் தோசத்தால் பல வழிகளிலும் பாதிக்கப்படுடவர்கள் சித்ரா பவுர்ணமி விரதத்தை கடைப்பிடிப்பதால் செவ்வாய் தோசம் நீங்கும். திருமண தடை அகலும், இல்லறம் சிறந்தோங்கும், ஆயுள் அதிகரிக்கும், விபத்து கண்டங்கள் நீங்கும்.
நவக்கிரகங்களில் கேதுவின் தேவதை சித்திர குப்தர்தான். கேதுவால் ஏற்படும் புத்திர தோசம், களத்திர தோசம், மாங்கல்ய தோசம், நாக தோசம் உள்ளிட்ட அனைத்து தோசங்களும் சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை விரதமிருந்து வழிபடுவதால் நீங்கும்.
தடைகள் மன குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சனைகள் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். புத்திரபாக்கியம் ஏற்படும், திருமணத்தடைகள் அகலும். தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சித்திர குப்தரை வணங்குவதால் நம்முடைய அத்தனை துன்பங்களையும் நீக்கி, செல்வத்தை அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.
-ஜோதிடர் சுப்பிரமணியன்.
- கியா மலை ஹவாயில் இருக்கும் ஒரு எரிமலை.
- கணக்கில் எடுத்தால் சிம்பரோஸா மலை தான் உயரம் என்கிறார்கள்.
உலகின் உயரமான மலை எது?
எவெரெஸ்ட் என்றால் பொதுவாக சரிதான். ஆனால் இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
பொதுவாக மலைகளின் உயரத்தை அளக்கையில் கடல் மட்டத்தில் இருந்து எத்தனை உயரம் என்பதை வைத்து அளந்துகொண்டிருந்தார்கள். இதன்படி உலக சராசரி கடல்மட்டம் அளக்கபட்டு, அதனுடன் மலைகளின் உச்சிகள் ஒப்பிடபட்டு எவெரெஸ்ட் உலகின் உயரமான மலை என கருதப்பட்டது.
ஆனால் கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகம் உலகின் உயரமான மலை "கியா மலை" (Mauna Kea, Hawaii, USA) என அறிவித்துவிட்டது.
"இது எப்ப நடந்தது? இது என்ன சதி" என டென்சன் ஆக வேண்டாம். நமக்கு தெரியாமல் பல விசயங்கள் இப்படி நடந்துகொண்டுள்ளன
கியா மலை ஹவாயில் இருக்கும் ஒரு எரிமலை. அதை உலகின் உயரமான மலை என அறிவிக்க காரணம் என்ன?
இப்போது இருவரின் உயரத்தை ஒப்பிட என்ன செய்வீர்கள்? கடல்மட்டத்தில் இருந்து அவர்களின் உயரம் என்ன என அளப்பீர்களா? அல்லது உச்சிமுதல் பாதம் வரை உயரம் என்ன என அளப்பீர்களா?
மலையின் அடி முதல் நுனிவரை உயரத்தை கணக்கிட்டால் கியா மலையின் உயரம் 10,211 மீட்டர். எவெரெஸ்டின் உயரம் 8849 மீட்டர்.
கியா மலையின் அடியாழம் சமுத்திரத்தில் உள்ளது.
இதில் சர்ச்சை வரவும் உலகின் உயரமான மலை எவெரெஸ்ட் (Highest), நீளமான மலை கியா (Tallest mountain) என தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள்.
இப்படி குழப்பம் இருக்க நடுவே தென்னமெரிக்காவின் ஈக்வடார் நாட்டுகாரர்களும் தங்கள் நாட்டு சிம்பராஸோ மலையை தூக்கிகொண்டு வந்து "இதான் உலகின் உயரமான மலை" என்கிறார்கள்.
அதாவது "அடி முதல் நுனி வரை, கடல்மட்டம்" கணக்கு எல்லாம் செல்லாது. பூமத்திய ரேகை பகுதியில் உலகமே சற்று வீங்கியது மாதிரி தான் உள்ளது. அதை கணக்கில் எடுத்தால் சிம்பரோஸா மலை தான் உயரம் என்கிறார்கள்.
- நியாண்டர் செல்வன்.
- என்னிடம் ஒரு தம்பிடி கூட இல்லை என்பார்கள்.
- தம்பிடி மட்டுமல்ல, அது குறிக்கிற அரை பைசா கணக்கு கூட கேள்விப்படல்லை
தம்பிடி...
இந்தச் சொல்லை அந்தக் காலத்தில் பெரியவர்கள் கூறுவதைக் கேட்டிருப்போம்.
எப்பா அவ்வளவு செலவுக்கு நான் எங்க போக?
என்னிடம் ஒரு தம்பிடி கூட இல்லை என்பார்கள்.
தம்பிடினா இன்றைய மதிப்பில் எவ்வளவு காசு?
இன்னைக்கு தம்பிடியைக் கொண்டு யாரிடமாவது கொடுத்தா.. அவ்வளவு தான்.. தூக்கி மூஞ்சியிலேயே எறிஞ்சுடுவான்.
எம்பூட்டு தம்பிடினா?
அரை பைசா..பைசாவிலே பாதி.
தம்பிடி மட்டுமல்ல, அது குறிக்கிற அரை பைசா கணக்கு கூட கேள்விப்படல்லை இதுகாறும்.
ஒரு அணா.. 6 பைசா..
தம்பிடி- அரை பைசா ..
12 தம்பிடி ஒரு அணா..
நாலணா கணக்குப்படி 24 பைசா
(புழக்கத்தில் 25 பைசா)
எட்டணா கணக்குப்படி 48 பைசா
புழக்கத்தில் 50 பைசா
16 அணா..ஒரு ரூபாய். ..96 பைசா
192 தம்பிடி..
ஒரு ரூபாயை பையிலே வச்சிக்கிட்டு இட்லிக்கடைக்கு சாப்பிடப் போயிருக்கேளா? அதுவும் இரண்டு பேரு.
நாங்க போனது நினைவு இருக்கு.
இந்தக் கால பிள்ளைகளுக்கு வியப்பளிக்கக் கூடும்.
-மு.சோமசுந்தரம்
- சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
- கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிக நேரமாக அமர்ந்திருக்கிறோம்.
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், ரெயில் வண்டிகளில், திரை, நாடக, இசை, சொற்மாழ்வு அரங்கங்களில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பற்பல உடல் நலிவுகள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி இருக்கிறோம். யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும். எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள். சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.
-துலாக்கோல்
- யானைகள் கூட்டத்தையும் மூத்த பெண் யானையே தலைமை தாங்கி வழிநடத்தும்.
- நிறைய உயர்ந்த பண்புகளை காட்டு விலங்குகளிடம் பட்டியலிட முடியும்.
விலங்குகளின் சில குணங்கள் நம்மை திணறடிக்கும். மனிதனை போலவே மிருகங்களுக்கு கோபம் பாசம் போன்ற உணர்வுகளும் உண்டு. அதே வேளையில் மனிதர்களின் உயர் குணங்களாக கருதப்படும் விசுவாசம் நாய்க்கு உண்டு.
காட்டில் வாழும் அனைத்து மிருகங்களுக்கும் இது போன்ற உயர் குணங்கள் உண்டு. கழுகு மற்றும் பருந்து வகையை சார்ந்த அனைத்து பறவைகளும் ஒரு முறை இணை சேர்ந்தால் வாழ்வில் கடைசி வரை அந்த இணையோடு மட்டுமே வாழும். தீக்கோழிகளும் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையோடு மட்டுமே வாழும்.
காட்டு நாய்கள் மற்றும் ஓநாய்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவது பெண் இனம் மட்டுமே. அந்த தலைமை மீது அந்த கூட்டம் வைத்திருக்கும் நம்பிக்கையும் விசுவாசமும் அளவிட முடியாதது. அந்த தலைமை தங்கள் கூட்டத்திற்கு ஆபத்தில்லாமல் பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும், அவசியம் என்றால் உயிரையும் விடும்.
யானைகள் கூட்டத்தையும் மூத்த பெண் யானையே தலைமை தாங்கி வழிநடத்தும். உணவு மற்றும் தண்ணீர் தேடி பயணப்படும் யானைகள் தலைமையை குருட்டு விசுவாசத்துடன் பின்பற்றவும் செய்யும். கூட்டத்தில் உள்ள எந்த குட்டிக்கும் அந்த கூட்டத்தில் உள்ள எந்த யானையும் பாலூட்டம். தாயை இழந்த அனாதை யானைக்குட்டிகளை பிற யானைகள் தங்கள் குட்டிகளுக்கு இணையாக பராமரிக்கும்.
ஆண் சிங்கங்கள் மற்றும் ஆண் சிவிங்கி சிறுத்தைகள் பருவ வயதை எட்டியவுடன் கூட்டத்தை விட்டோ தாயை விட்டோ விரட்டியடிக்கப்படும். அவ்வாறு விரட்டியடிக்கப்படும் இரண்டு அல்லது மூன்று ஆண் சிங்கங்களோ சிறுத்தைகளோ அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் சரி, சில வேளைகளில் அன்னியர்களாக இருந்தாலும் கூட கூட்டணி அமைத்து நட்பு பாராட்டும். இந்த நட்பும் கூட்டணியும் சாகும் வரை பிரியவும் செய்யாது, நட்புக்காக உயிரையும் கொடுக்கும்.
இது போல் நிறைய உயர்ந்த பண்புகளை காட்டு விலங்குகளிடம் பட்டியலிட முடியும்.
-நாடோடி
- நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஆற்றல்மிக்கவர்களாக இருக்க முற்படுங்கள்.
- நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்தால் திரும்பிவராது... கடனாக பெற்றால் திருப்பி செலுத்த இயலாது.
பயணம் சென்றவர் வீட்டிற்கு திரும்புவதும் பெரும் சிரமம். வியாதியுடன் படுக்கையில் படுத்தவர் குணம் அடைவதும் அசாத்தியம்.
கடன் கொடுக்கவோ வாங்கவோமுடிவு எடுக்கும் முன்னும்.. நீண்டதூர பயணம் அதாவது கடல் கடந்தோ மாநிலம் விட்டு மாநிலமோ முக்கியமான காரியங்களுக்கான பயணமோ செய்யும் முன்னும் மேற்கண்ட நட்சத்திரங்கள் வந்தால் அந்த நாளை தவிர்த்துவிடுங்கள்.
மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஆற்றல்மிக்கவர்களாக இருக்க முற்படுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
கண்டிப்பாக மேற்சொன்ன நட்சத்திரங்கள் வரும் நாட்களில் இறைவழிபாடு செய்யுங்கள்.
நோய் உருவாக காரணமாக இருக்கும் விசயங்களை தயவுசெய்து செய்யாதீர்கள்.
மேற்சொன்ன இந்த விசயங்களை கடைபிடித்தாலே உங்களது துன்ப வாழ்விலிருந்து 75 சதவீதம் மீண்டுவிட முடியும்.
-யாவுமானவன்
- கல்லீரல் அழற்சி, கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்றவற்றைத் தடுக்கும்.
- சோறு வடித்த நீர் அல்லது முதல்நாள் சோற்றில் ஊறிய நீராகாரத்தை 50 மி.லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம், குடலில் தங்கியுள்ள கழிவுப் பொருள்களும் நச்சுகளுமே. நாள்தோறும் மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும் வயிற்றுக் கழிவுகளை அகற்றப் போதுமானவை அல்ல, கழிவுகளை முழுமையாக வெளியேற்ற பேதி மருந்து அவசியம்' என்கிறது சித்த மருத்துவம்.
நான்கு மாதத்துக்கு ஒரு முறை பேதி எடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம்'எனக் கூறுகிறது சித்த மருத்துவம். அதனால் கால்வலி, மூட்டுவலி, அஜீரணம் போன்ற வாதநோய்கள் நீங்கும், உற்சாகம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தில் பல்வேறுவிதமான மருந்துகள் பேதிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கிராமங்களில் பின்பற்றிவரும் ஓர் எளிய முறை எல்லோரும் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடியதாக இருக்கிறது. அதற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்தது. இதை, `வயிற்றைச் சுத்தமாக்கும் மருந்து' என்றே சொல்லலாம். இது உடலிலுள்ள கழிவுகளை மலத்தின் மூலம் வெளியேற்றி, பசியின்மையை நீக்கி, உடலை வலுவாக்கும். கடுமையான வாய்வுக் கோளாறையும், குன்மம் நோயையும் போக்கும். அத்துடன் வாதம், பித்தம் மற்றும் கபம் சமநிலைப்படுத்தப்பட்டு நோய்கள் கட்டுக்குள் வரும்.
சோறு வடித்த நீர் அல்லது முதல்நாள் சோற்றில் ஊறிய நீராகாரத்தை 50 மி.லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், அத்துடன் 30 மி.லி ஆமணக்கு எண்ணெயையும் சேர்த்து அருந்த வேண்டும். அரை மணி நேரத்துக்குள் மலம் வெளியேறும். பேதிக்கு மருந்து சாப்பிட அதிகாலை நேரம் மட்டுமே சிறந்தது. அதுவும் வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். டீ, காபி சாப்பிட்டதும் எடுக்கக் கூடாது. பேதிக்கு எடுக்கும் முன்தினம் இரவு அதிக அளவிலான, கடினமான உணவுகளைத் தவிர்த்து, எளிதில் செரிமானமாகும் உணவை உண்ண வேண்டும்.
பேதிக்கு மருந்து எடுத்த நாளில் பத்தியம் இருக்க வேண்டியது அவசியம். அந்த நாளில் மோர் சாதம், பால் சாதம், இட்லி, அரிசிக் கஞ்சி போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதிக காரம், மசாலா, புளி சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மலம் அடிக்கடி வெளியேறுவதால் உடலிலுள்ள உப்புகளும் தாதுக்களும் வெளியேறுவதுடன் உடல் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம். எனவே, அவற்றை ஈடுகட்ட சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் 'பத்திய ரசம்' அருந்த வேண்டும். பொதுவாக புளியைக் கரைத்து மிளகு, பூண்டு சேர்த்துக் கொதிக்கவைப்பது வழக்கம். ஆனால், இந்த ரசத்தில் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்க வேண்டும். ரசத்தில் சேர்க்கப்படும் மற்ற பொருள்களையும் சேர்க்க வேண்டும். கடுகு, எண்ணெய் சேர்த்துத் தாளிக்கக் கூடாது.
பேதி மருந்து சாப்பிட்டதும், இந்த ரசத்தை சிறுகச் சிறுக அருந்த வேண்டும். நான்கு, ஐந்து தடவை மலம் வெளியேறியதும் அன்று காலை 11 மணியளவில் மோர் அருந்த வேண்டும். இதையடுத்து வயிற்றுப்போக்கு நின்றுவிடும். மதியம் மோர் சாதம் சாப்பிட வேண்டும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட வேண்டும்.
பேதி மருந்து சாப்பிடுவதால் வயிறு மட்டுமல்லாமல் பித்தநீர் வரும் பாதை, கணையம் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் கழிவுகள் அகற்றப்படும். செரிமான நொதிகள் தூண்டப்படும். குடல் தூய்மையாகும். சத்துகளை உட்கிரகிக்கும் தன்மை கிடைக்கும். கல்லீரல் அழற்சி, கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்றவற்றைத் தடுக்கும்.
வயது, உடல் எடை, நாடித்துடிப்பைப் பொறுத்து பேதிக்கான மருந்துகளும் அளவுகளும் மாறுபடுவதால் சுயமாக மருந்து எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, பேதி மருந்து எடுப்பது மிகவும் சிறந்தது.
-டாக்டர் தெ.வேலாயுதம்
- நீயோ, துயரத்தோடு தான் இருப்பது என்று உன் மனதில் முடிவெடுத்து விட்டாய்.
- உன்னை சுற்றி நடக்கின்ற ஆனந்தமான நிகழ்வுகளை எல்லாம், அந்த எண்ணத்திற்கு அடகு வைத்து விட்டாய்.
மனம் இடை விடாமல் ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது..
ஒரு கணம் கூட ஆசைப்படாமல் அது இருப்பதில்லை.
நாள் முழுக்க ஆசை.
இரவு முழுக்க ஆசை.
எண்ணங்களில் ஆசை.
கனவுகளில் ஆசை.
மனம் ஆசை படுவதிலேயே இருக்கிறது..
இன்னும் இன்னும் என்று ஆசைக்கு பின் ஆசை.
அதனால், மனம் எப்போதும் அதிருப்தியிலேயே கிடக்கிறது.
எதுவும் மனதை திருப்தி படுத்துவதில்லை.
எது வேண்டும் என்று ஆசைப்படுகிறாயோ, அதை அடைந்து விடலாம்.
அதை அடைந்து விட்ட பின்னர், அதன்மேல் வைத்து ஆசை நாளடைவில் முடிந்து விடுகிறது.
'அவளை' அடைய வேண்டும் என்ற தீராத ஆசை உனக்கு.
இதோ, அடைந்தாயிற்று.
அதன்மூலம் என்ன தான் கிடைத்து விட்டது என்கிறாய் ?
அடைந்த பின்னர், உனக்குள் இருந்த, கனவுகள், கற்பனைகள் அனைத்தும் பறந்து போய் விட்டன..
விரக்தி தான் நிற்கிறது.
இதற்குத்தானா இவ்வளவு கடின நிகழ்வுகளை சந்தித்தோம் என்ற எண்ணம், அந்த விரக்தியை உண்டு பண்ணிவிடுகிறது.
ஒன்றை கவனமாக நினைவில் கொள்ளுங்கள்..
மனதிற்கு ஆசைபடுவது எப்படி ? என்பது மட்டும் தான் தெரியும்.
எனவே, திருப்தியாக இருப்பதற்கு அது, உன்னை விடவே விடாது.
மனதின் உயிர் 'ஆசை' என்ற உணர்வில் உள்ளது.
மனதின் மரணம், 'திருப்தி' என்ற உணர்வில் உள்ளது.
எந்த மனம் தான் மரணமடைய விரும்பும் ?
நீயோ, துயரத்தோடு தான் இருப்பது என்று உன் மனதில் முடிவெடுத்து விட்டாய்..
உன்னை சுற்றி நடக்கின்ற ஆனந்தமான நிகழ்வுகளை எல்லாம், அந்த எண்ணத்திற்கு அடகு வைத்து விட்டாய்.
அது மட்டும் இல்லையென்றால், நீ துயரப் படுவதற்கு வேறு காரணமே இல்லை.
மனதை வெல்வதற்கு ஒரு வழியை புத்தர் சொல்கிறார்..
'மனதை அடக்கிக் கொண்டு இருக்க முயற்சிக்கதே..
அந்த செயலை விட, எதிர்விளைவுகளை தந்து விடும் செயல் வேறு எதுவும் இல்லை.
உனது தேவைகளை குறைத்துக் கொண்டே வந்து,..
நாளடைவில்,தேவைகள் எதுவும் இல்லாதவனாக இரு..
உன்னிடம் ஏற்கனவே உள்ளதில் 'திருப்தி' யாக இரு..
விரைவில் மனம் இறந்து போய் விடும்.
பிறகு, முடிவில்லாத கொண்டாட்டம் தான்!
-ஓஷோ.
- வீடு கட்டுதல், கிணறு வெட்டுதல், கோவில் கட்டுதல் போன்ற பணிகளை தொடங்கினால் நன்மை தரும்.
- வாஸ்து புருஷன் விழித்திருக்கும் 3 3/4 நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் விழித்திருப்பார்.
ஒரு ஆண்டில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வாஸ்து புருஷன் தூக்கத்தில் இருந்து எழுகிறார். அந்த நேரத்தில் வீடு கட்டுதல், கிணறு வெட்டுதல், கோவில் கட்டுதல், தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் கட்டுதல் போன்ற பணிகளை தொடங்கினால் நன்மை தரும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வாஸ்து புருஷன் கண் விழித்திருப்பார். அந்த நேரத்தில் கட்டிட பூஜை போடுவது நன்மை தருவதாக இருக்கும்.
வாஸ்து புருஷன் விழித்திருக்கும் 3 3/4 நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் விழித்திருப்பார். அதில் முதல் 3/4 நாழிகை அதாவது 18 நிமிடங்கள் பல்துலக்குவார். அடுத்த 3/4 நாழிகை அதாவது 18 நிமிடங்கள் ஸ்னானம் செய்வார். அதற்கு அடுத்த 3/4 நாழிகை சாப்பிடுவார். அதற்கு அடுத்த 3/4 நாழிகை அதாவது 18 நிமிடங்கள் தாம்பூலம் தரிப்பார். பின்னர் மீண்டும் தூங்க சென்று விடுவார்.
மனை முகூர்த்தம் செய்பவர்கள் வாஸ்து புருஷன் சாப்பிடும்போது அந்த 18 நிமிடங்களிலும் தாம்பூலம் போடும் 18 நிமிடங்களிலும் ஆக மொத்தம் 36 நிமிடங்களில் செய்வது உத்தமம்.
இனி வாஸ்து புருஷன் விழித்திருக்கும் குறித்து பார்ப்போம்.
சித்திரை மாதம்: 10 ந்தேதி காலை 8 மணிமுதல் 9.30 மணிவரை கண் விழித்து இருப்பார். அதில் 8 மணி 54 நிமிடம் முதல் 9 மணி 30 நிமிடம் வரை மனை பூஜை செய்யலாம்.
வைகாசி மாதம்: 21 ந்தேதி காலை 9 மணி 12 நிமிடம் முதல் 10 மணி 42 நிமிடம் வரை கண்விழி்ததிருப்பார். அதில் 10 மணி 6 நிமிடம் முதல் 10 மணி 42 நிமிடம் வரை மனை பூஜை செய்யலாம்.
ஆடி மாதம்: 11 ந்தேதி காலை 6 மணி 48 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை வாஸ்து புருஷன் கண் விழித்து இருப்பார். இதில் 7 மணி 42 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை பூஜை செய்யலாம்.
ஆவணி மாதம்: 6 ந்தேதி பிற்பகல் 2 மணி 24 நிமிடம் முதல் 3 மணி 54 வரையில் கண்விழித்து இருப்பார். இதில் 3 மணி 18 நிமிடம் முதல் 3 மணி 54 நிமிடம் பூஜை செய்வது சிறந்தது.
ஐப்பசி மாதம்: 11 ந்தேதி காலை 6 மணி 48 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை வாஸ்து புருஷன் கண் விழித்து இருப்பார். இதில் 7 மணி 42 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரையிலும் மனை பூஜை போடலாம்.
கார்த்திகை மாதம்: 8 ந்தேதி காலை 10 மணி முதல் 11.30 மணிவரை விழித்திருக்கும் போது 10 மணி 54 நிமிடம் முதல் 11 மணி 30 நிமிடம் வரை பூஜை போடலாம்.
தை மாதம்: 12ந்தேதி காலை 8 மணி 24 நிமிடம் முதல் 9 மணி 54 நிமிடம் வரை வாஸ்து கண் விழித்திருகும் நேரம் ஆகும். இதில் 9 மணி 18 நிமிடம் முதல் 9 மணி 54 நிமிடம் வரை வாஸ்து பூஜை செய்யலாம்.
மாசி மாதம்: 22 ந்தேதி 9 மணி 12 நிமிடம் முதல் 10 மணி 42 நிமிடம் வரை வாஸ்து புருஷன் கண்விழி்த்திருக்கும் காலம் ஆகும். இதில் 10 மணி 6 நிமிடம் முதல் 10 மணி 42 நிமிடம் வரை மனை பூஜை போடலாம்.
-சிவசங்கர்
- நம் கிராமத்து உறவுக்களுக்கு பயிர்களின் தன்மையை பெயராக ஆக்கி இருக்கிறது தமிழ்!
- ஒரு தாவர கன்றின் முனைப்பகுதியை கொழுந்து என்கிறோம்.
தமிழின் சிறப்பு என்னவென்றால் ஒரு பொருளுக்கோ, உறவுக்கோ உணர்வு பூர்வமான பெயர்களை, நம் மொழி உருவாக்கி விடும்!
மற்ற எந்த மொழிகளிலும் இந்த சிறப்பு கிடையாது. அத்தைக்கும், சின்னம்மாவுக்கு ஆங்கிலத்தில் ஆன்டி என ஒரு வார்த்தை இருப்பது போல் மற்ற மொழிகளில் கூட அப்படித்தான் இருக்கும்.
நம் கிராமத்து உறவுக்களுக்கு பயிர்களின் தன்மையை பெயராக ஆக்கி இருக்கிறது தமிழ்!
ஒரு இடத்தில் நாற்று பாவி பிறகு அதை பறித்து இன்னொரு இடத்தில் நடுவோம். அது செழிப்பாக பல கிளைகள் ஏந்தி விளையும்.
ஒரு இடத்தில் இருக்கும் பெண்ணை, இன்னொரு இடத்தில் திருமணம் செய்து கொடுக்கிறோம், அது கணவர் வீட்டில் செழிப்பாக வாழ்கிறது.
புகுந்த வீட்டுக்கு வரும் பெண், கணவரின் சகோதரியை அழைக்கும் உறவின் பெயர் "நாத்தனார்"
பிறந்தது இங்க தான் என்றாலும் இன்னொரு வீட்டுக்கு போய்விட்டார் என்பதை உணர்த்த நாற்று போல் ஆனார், "நாற்றனார்".அது மருவி"நாத்தனார்" ஆனது.
நாம கல்யாணம் பண்ற வரைக்கு மனைவியின் அப்பா நமக்கு மாமா உறவு கிடையாது.
திருமணம் ஆனவுடன் அவர் நமக்கு மாமா+ஆனார்!
அதான் மாமனார்!
மாமி+ஆனார்=மாமியார்!
ஒரு தாவர கன்றின் முனைப்பகுதியை கொழுந்து என்கிறோம். கொழுந்து என்றால் இளமை என்று பொருள்!
கணவருக்கு பின் பிறந்த சகோதரன் கொழுந்து+ஆனவர், அதாவது கொழுந்தனார்!
மனைவிக்கு இளையவள் கொழுந்து+ஆகியவள் கொழுந்தியாள்!
-ஆறுமுகம் கென்னடி
- வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம்.
- அருகம் புல் சாறு நம் உடலில் இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது.
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.
அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது.
உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
அருகம்புல் சாறையும், தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.
அருகம்புல் சாறு சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் வல்லமை அருகம்புல் சாறுக்கு உண்டு.
தோல் வியாதி உள்ளவர்கள் தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி அருகம்புல் பொடி சேர்த்து குடித்து வந்தால் தோல் பிரச்னை தீரும்.
நரம்புத் தளர்ச்சி மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. கர்ப்பப்பை கோளாறுகளும் நீங்கும்.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம்.
அருகம் புல் சாறு நம் உடலில் இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
அருகம்புல் சாறை பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.
அருகம் புல், பல், ஈறு கோளாறுகளை நீக்கும், வாய் துர் நாற்றத்தைப் போக்கும்.
-ஹீலர் கோபிநாதன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்