search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் 4 தொகுதி இடைத்தேர்தலில் நாளை ஓட்டுப்பதிவு
    X

    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் 4 தொகுதி இடைத்தேர்தலில் நாளை ஓட்டுப்பதிவு

    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

    சென்னை:

    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (19-ந்தேதி) நடக்கிறது.

    நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, மக்கள் நீதிமய்யம் சார்பில் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் போட்டியிடுகிறார்கள்.

    இங்கு ஆண்கள் 99,052 பேரும், பெண்கள் 1,06,219 பேரும், இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் 159 இடங்களில் 250 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 29 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 4 பேலட் யூனிட்டுகள் (பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்தும் எந்திரம்), ஒரு கண்ட்ரோல் யூனிட் (வாக்குப்பதிவினை கட்டுக்குள் வைத்திருக்கும் எந்திரம்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான விவிபேட் எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன.

    இதற்காக 1199 பேலட் யூனிட்டுகள், 295 கண்ட்ரோல் யூனிட்டுகள், 313 விவிபேட் எந்திரங்கள் தயார் நிலையில் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை இன்று மதியத்திற்கு மேல் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 1200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன. 4 கம்பெனிகளை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 320 பேர் தேர்தல் பணிக்காக வந்துள்ளனர். துணை ராணுவத்தினர், உள்ளூர் போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வி.பி. கந்தசாமி, தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அ.ம.மு.க. சார்பில் சுகுமார், மக்கள் நீதி மய்யத்தில் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயராகவன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 324 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 130 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

    அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சூலூர் தொகுதியில் 778 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், 388 கட்டுப்பாட்டு எந்திரங்களும், வி.வி. பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) 422-ம் பயன்படுத்தபப்பட உள்ளது.

    மாற்றுத் திறனாளிகளுக்காக 324 சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் மையம் எது என்பதை எளிதாக கண்டறிய ஏற்கனவே பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

    சூலூர் தொகுதியில் 324 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள 778 மின்னணு எந்திரங்கள் சூலூர் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சின்னம் பொருத்தப்பட்டது. இந்த மின்னணு எந்திரங்களை வாக்குச் சாடிக்கு அனுப்பும் பணி இன்று தொடங்கியது. காலை முதல் சூலூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஓட்டுப்பதிவுக்கு தேவையான மை உள்ளிட்ட பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் இன்று இரவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு செல்கிறார்கள்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர்.

    சூலூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர். பெண்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் ஆவார்கள்.

    சூலூர் தொகுதியில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் 324 பேரும், கூடுதல் பார்வையாளர்கள் 400 பேரும், 9 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. மக்கள் நீதிமன்றம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 37 பேர் களத்தில் உள்ளனர். இங்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 533 பேர் ஆண் வாக்காளர்கள். 1 லட்சத்து 53 ஆயிரத்து 918 பேர் பெண் வாக்காளர்கள். 27 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் அவனியாபுரத்தில் 150-ஏ, 186-ஏ, வாக்குச் சாவடிகள் முற்றிலும் பெண்களுக்கானது. இங்கு பெண் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

     


     

    மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 88 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவத்தினர் மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 130 வெப்- கேமராக்கள் பொருத்தப்பட்டு, திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மானிட்டர் மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்படுகிறது.

    தேர்தல் பணியில் 1500 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் தவிர நுண்பார்வையாளர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். நோட்டாவுடன் சேர்த்து 38 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச் சாவடியில் வைக்கப்பட உள்ளன. இது தவிர கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வி.வி.பேட் எந்திரம் போன்றவையும் அமைக்கப்படுகிறது.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மோகன், தி.மு.க. சார்பில் சண்முகையா, அ.ம.மு.க. சார்பில் சுந்தர்ராஜ், மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அகல்யா உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 8, பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 51, 3-ம் பாலினத்தவர் 16 என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்களாளர்கள் உள்ளனர்.

    அவர்கள் வாக்களிப் பதற்காக தொகுதி முழுவதும் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர்கள் வாக் களிக்க வசதியாக அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ள 71 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 143 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    அவற்றில் 54 வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், 17 சாவடிகளில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி ஒட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 46 இன்ஸ்பெக்டர்கள், 50 அதிரடி படை போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 துணை ராணுவ வீரர்கள் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக்கூடிய கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் பொருத்தப்பட்ட 335 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், 360 வி.வி.பேட் ஆகியவை ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு இன்று அனுப்பப்படுகின்றன.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

    Next Story
    ×