என் மலர்
செய்திகள்

மெகா கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் மிரண்டு விட்டார் - எடப்பாடி பழனிசாமி
திருச்சி:
திருச்சி, கரூர், சிவகங்கை தொகுதி தே.மு.தி.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மூலம் நாடு வளர்ச்சி பெறவும், பாதுகாப்புடன் இருக்கவும் தகுதியான பிரதமர் தேவை என்பதை உணர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. எதிர் அணியினர் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.
வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனியாக கட்சி தொடங்கிவிட்டு, இன்று அவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அவர்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். மக்கள் மீது அக்கறையுள்ள கூட்டணி நமது கூட்டணி. கொள்கை உடைய கூட்டணி. ஆனால் அவர்களின் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி.
மு.க.ஸ்டாலின் வாக்காளர்களை குழப்பி வருகிறார். இந்த மெகா கூட்டணியை பார்த்து அவர் மிரண்டு போயுள்ளார். விரக்தியில் அவர் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசி வருகிறார்.

நான் ஆடு வளர்க்கிறேன், சென்னையில் கோழி வளர்க்கிறேன், அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறேன். காரணம் நான் ஒரு விவசாயி. நான் படிப்படியாக முன்னேறி முதல்வராகி உள்ளேன். அடிமட்ட தொண்டனுக்கும் உயர்ந்த பதவி கொடுத்து அழகு பார்ப்பது அ.தி.மு.க.தான். ஆலங்குடியை சேர்ந்த விவசாயி கூட அடுத்த முறை முதல்வர் ஆகலாம்.
தூங்கி கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் எடப்பாடி பழனிசாமி பதவி விலகிவிட்டாரா? என்று என்னை திட்டிக்கொண்டே எழுந்திருப்பார். ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டது. அதனால்தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணத்தை கண்டுபிடிப்போம் என கூறி வருகிறார். யாரால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டார் என மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, துன்பப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி தி.மு.க.வால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இறக்க வைத்துவிட்டனர். தற்போது இது குறித்து நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இதுபற்றி நான் விரிவாக கூற முடியாது.
15 ஆண்டுகளாக மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்துள்ளது. மத்திய அரசிடம் ஏதாவது நிதி பெற்று திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. 15 ஆண்டு காலமாக தங்கள் குடும்பத்தினர் பதவிக்கு வர வேண்டும் என கூட்டணி வைத்திருந்தனர். ஆனால் மக்கள் பணி செய்யதான் அ.தி.மு.க. அரசு உள்ளது.
மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஏழை மக்கள் பயன் பெறுவதற்காக இந்த இயக்கத்தை தொடங்கினார்கள். அவர்களிடம் பாடம் கற்ற நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறோம். ஆனால் ஸ்டாலின் ஏதாவது ஒரு பிரச்சினையை கூறி பதவி விலக வேண்டும் என்கிறார். அவர் கூறியபடி பார்த்தால் நான் 100 முறை பதவி விலக வேண்டியிருக்கும். பூதக் கண்ணாடியை போட்டு பார்த்தால் கூட, மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குறையையும் கண்டுபிடிக்க முடியாது.
எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறினார். நீதிமன்றத்தில் ஊழல் செய்யவில்லை என்று நிரூபித்துள்ளோம். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி அது தி.மு.க.தான். இப்போது உதயநிதி ஸ்டாலின் என்னை பற்றி விமர்சித்து வருகிறார். எனது அரசியல் அனுபவம்தான் அவரது வயது. அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு உள்ளது. தி.மு.க.வில் பொறுப்பில் இல்லாத யாராவது ஒருவரால் பேச முடியுமா? ஸ்டாலின் மகன் என்பதால் தான் அவரால் பேச முடிகிறது.
இப்போது அவர்கள் வெற்றி பெற்றால் தங்களுக்கு வேண்டிய பதவிகளை பெறத்தான் குறியாக இருப்பார்கள். மக்களை பற்றியோ, தமிழ்நாட்டை பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க 35 ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதனை சமாளித்து நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறோம். தி.மு.க. அராஜக ஆட்சி என்பதை இப்போதும் நிரூபித்து வருகின்றனர். எனவே தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி. மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலை, மாத்தூர் ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கி உள்ள கட்சிகள். அதனால் வருகிற பாராளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்த கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு எதிர்கொண்டு நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி. மக்களை குழப்புவதற்காகவே, தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது.
அனைத்து துறைகளிலும் சாதனை படைத்ததன் மூலம் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றிருக்கிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்ததற்காக ஆங்கில நாளிதழ் சார்பாக விருது, உணவு தானிய உற்பத்தி அதிகரித்ததற்காக இந்திய அளவில் கிருஷி கர்மான் விருது, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் முதன்மை பெற்றதற்காக சுகாதாரத்துறைக்கு விருது, கல்வித்துறைக்கு விருது, அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ததற்காக விருது, உள்ளாட்சி துறைக்கு விருது போன்ற பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற மாநிலம் தமிழகம் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன். இதுபோன்று மக்கள் பணியாற்றிவரும்அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #MKStalin






