என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளைஞர்கள் தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் - கமல்ஹாசன்
    X

    இளைஞர்கள் தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் - கமல்ஹாசன்

    இளைஞர்கள் தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    புதுச்சேரி:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஏ.எப்.டி. மில் திடலில் நேற்று இரவு மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்தில் புதுவை மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை கமல் ஹாசன் வெளியிட்டு பேசியதாவது:-

    புதுவையை தமிழகத்தின் ஒரு பகுதியாகத் தான் நான் பார்க்கிறேன். ஆனாலும் தனித்தன்மையை புதுவை இழந்து விடக்கூடாது. அப்படி இருந்தால் தான் புதுவைக்கும், தமிழருக்கும் பெருமை,

    அரசியல் கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் நல்ல கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். நாங்கள் திறமையையும், நேர்மையையும் வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். படித்தவர்கள் அனைத்து இனத்திலும் உள்ளனர் என்பதை மக்கள் நீதி மய்யம் நம்புகிறது.

    தமிழகம் மற்றும் புதுவை படுத்த படுக்கையில் கிடக்கிறது. அதை எழுந்து நிற்க வைக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. அதனை உங்களின் வாக்குகளால் மாற்றியமைக்க முடியும் டுவிட்டரில் அரசியல் வாதிகள் மீது காட்டும் கோபத்தை இளைஞர்கள் தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்.


    எங்களுக்கு நல்ல யோசனை கொடுப்பதே எங்களது விரோதிகள் தான். டுவிட்டரில் மட்டுமே இயங்கி வந்ததாக என்னை விமர்சனம் செய்ததால் அடுத்த 3 மாதங்களில் அரசியல் களத்துக்கு நேரடியாக வந்து விட்டேன். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளோம்.

    அதை எப்படி செய்ய முடியும் என கேள்வி கேட்கின்றனர். வேலைகளை பல பிரிவுகளாக பிரித்து ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வழங்குவோம்.

    புதுவை மாநிலத்தில் நிறை குறைகளை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளோம். இந்த தேர்தல் அறிக்கைகள் அள்ளி வீசப்படுபவை அல்ல. எங்களால் எதை செய்ய முடியும் என்பதை நன்கு அலசி ஆராய்ந்து வடிகட்டி இதை தயார் செய்துள்ளோம். இந்த அறிக்கையை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வக்கீல், டாக்டர் என பலரும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

    என்னை புகழின் உச்சியில் வைத்து மக்களுக்காக என்ன செய்தேன் என்பதை சிந்தித்தேன். அந்த குற்ற உணர்வு காரணமாகத்தான் இந்த தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    சொந்த வாழ்க்கைக்கு தேவைப்படும் பணத்துக்காக மட்டுமே திரையுலகில் நடிக்கிறேன். உங்களை போலத் தான் பசித்து, விழித்து, தனித்து இருக்க வேண்டும் என்பதற்காகவே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறோம். தமிழகம், புதுவையின் தலைவிதியை மாற்றிய மைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராஜன் வரவேற்றார். சிறப்பு பேச்சாளர் நடிகை ஸ்ரீபிரியா, துணைத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான மகேந்திரன், வேட்பாளர்களான ரவி (சிதம்பரம்), அண்ணாமலை (கடலூர்), மவுரியா (வடசென்னை), அன்பின் பொய்யாமொழி (விழுப்புரம்), குருவைய்யா (நாகப்பட்டினம்) மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    முடிவில் பிராங்ளின் பிரான்சுவா நன்றி கூறினார்.  #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    Next Story
    ×