search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் மனைவி-மாமியாரை கத்தியால் குத்திய தொழிலாளி
    X

    பொள்ளாச்சியில் மனைவி-மாமியாரை கத்தியால் குத்திய தொழிலாளி

    • போதை தலைக்கேறிய நிலையில் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார்.
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பழனியப்பா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பாலக்காடு ரோட்ைட சேர்ந்த ஸ்ரீரேகா (24) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீரேகா கணவரை பிரிந்து மகனுடன் பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர் அவரது மனைவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் மனைவியின் இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீரேகாவின் தாயார் தீபா ராணி தடுக்க முயன்றார். அவரையும் விக்னேஷ் கத்தியால் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் தாய், மகள் ஆகியோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×