என் மலர்
உள்ளூர் செய்திகள்

போர்வெல்களுக்கு வணிக மின் கட்டணம் நிர்ணய பணிகள் தீவிரம்
- அப்பார்ட்மென்ட்களில் போர்வெல்கள் இயக்குவதற்கு பயன்படுத்தும் மோட்டார்களுக்கு தனி மின் இணைப்பு பெற்றுள்ளனர்.
- 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு மின் இணைப்பு வகை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மடத்துக்குளம் :
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த குடியிருப்புகளில் பயன்படுத்தும் போர்வெல்களுக்கு, தனி மின் இணைப்பு பெறப்பட்டிருந்தால் அதற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு வணிக ரீதியான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கான பணியை மின் வாரியம் வேகப்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் அப்பார்ட்மென்ட்களில் போர்வெல்கள் இயக்குவதற்கு பயன்படுத்தும் மோட்டார்களுக்கு தனி மின் இணைப்பு பெற்றுள்ளனர். இதுவரை இந்த மின் இணைப்புகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நடைமுறையை மின் வாரியம் மாற்றியுள்ளது. புதிய நடைமுறையில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு மின் இணைப்பு வகை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் வணிக ரீதியான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் கூறுகையில், மின் கட்டணத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த குடியிருப்புகளில் பயன்படுத்தும் போர்வெல்களுக்கான மின் இணைப்புக்கு வகை மாற்றம் செய்வது தேவையற்றது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவே போர்வெல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டணத்தை வணிக ரீதியான வகைப்பாட்டுக்கு மாற்றியிருப்பது நியாயமற்றது என்றனர்.






