கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா

திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ் சேரன் என்பவர் என்னை பற்றி அவதூறாக கூறி எனக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பிரச்சினை செய்து வருகின்றனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை படத்தில் காணலாம்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

சிதம்பரம் வல்லம்படுகை வல்லந்துறையை சேர்ந்தவர் செந்தமிழ் அரசி (வயது 30). இவர் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது- 

நான் எனது குடும்பத்துடன் வல்லந்துறை பகுதியில் வசித்து வருகின்றேன். இந்த நிலையில் எனக்கு திருமணம் நடைபெற வேண்டி பல்வேறு குடும்பத்தில் வரன்கள் பார்த்துவந்த போது அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ் சேரன் என்பவர் என்னை பற்றி அவதூறாக கூறி எனக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பிரச்சினை செய்து வருகின்றனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். 

இதன் காரணமாக நான் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றேன். இந்த பிரச்சனை தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்‌. இது வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் போலீசார் எங்களை மிரட்டும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com