search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா
    X

    மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா

    • 7 காட்டு யானைகள் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன.
    • வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

    குன்னூர்,

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும் குன்னூரில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், அந்த பழங்களை ருசிக்கவும் யானைகள் முகாமிட்டு உள்ளன. இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் அடர்லி, ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே உலா வருவதோடு, மலை ரெயிலை வழிமறித்து வருகின்றன. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்க்க தொடங்கி உள்ளன. இதன் பழங்கள் யானைகளுக்கு பிடித்த உணவாகும். இதனால் பலா பழங்களை ருசிக்க 7 காட்டு யானைகள் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை கே.என்.ஆர்.நகர் அருகே 7 காட்டு யானைகள் உலா வந்தன. இதை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தினர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் சாலையோரத்தில் யானைகள் நின்றன. பின்னர் சுமார் ½ மணி நேரம் கழித்து சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் யானைகள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது. அதனை தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×