என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கள்ளச்சாராயம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் வெளியீடு
- மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
- தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
கோவை,
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா கூறியதாவது:-
கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது, கடத்துவது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 7604010581 என்ற செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இந்த எண் மூலம் வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
குறிப்பாக முக்கிய பகுதியாக கருதப்படும் சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர், துடியலூர், தடகாம், காரமடை, மேட்டுப்பாளையம், வடவள்ளி, ஆலாந்துறை, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
அதில் உள்ள செல்போன் எண் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.