search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் மஞ்சள் காமாலையால் மேலும் 40 பேர் பாதிப்பு
    X

    டவுன் பெரிய தெருவில் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    நெல்லையில் மஞ்சள் காமாலையால் மேலும் 40 பேர் பாதிப்பு

    • டவுன் பெரிய தெருவில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு டவுன் பெரியதெரு உள்பட ஏராளமான இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தி வருகின்றனர்

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் குறிப்பாக டவுன் பகுதியில் கடந்த சில நாட்களாக மஞ்சள்காமாலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரிய தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி ஸ்ரீநிதி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    டவுன் பெரிய தெருவில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சாக்கடையை தூர்வாருதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளார் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் குடிநீரில் சாக்கடை கலப்பது தொடர்கதை ஆகிவிட்டது. தொண்டர் சன்னதியில் தொடங்கி நயினார்குளம் வரையிலும் கழிவு நீர் ஓடைகள் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

    மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியவுடன் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வந்து அங்குள்ள மக்கள் பருகும் குடிநீரை மாதிரி எடுத்து ஆய்வுக்கு சென்னைக்கு அனுப்பி உள்ளனர்.

    அதன் முடிவில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்திருப்பது தெரிய வந்தது. ஆனாலும் இதுவரை எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதுதொடர்பாக 2 மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மட்டுமல்லாது மேயர் துணை மேயரிடமும் மனு கொடுத்து வருகிறோம்.

    ஆனால் மனுவை அவர்கள் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதோடு எல்லாம் முடிந்து விடுகிறது.

    தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கைகளின் காரணமாக நாங்கள் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று ஆதங்கத்துடன் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

    இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு டவுன் பெரியதெரு உள்பட ஏராளமான இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தி வருகின்றனர். அங்கே சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

    Next Story
    ×