search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இல்லம் தேடி கல்வி மையங்கள் திறப்பு
    X

    இடையங்குளம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட கூடுதல் மையத்தை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    இல்லம் தேடி கல்வி மையங்கள் திறப்பு

    • விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி மையங்கள் திறக்கப்பட்டது.
    • பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளது.

    கூடுதல் மையங்கள் திறப்பு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். தன்னார்வலர் சித்ரா வரவேற்றார்.

    கூடுதல் மையங்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை ஈடுசெய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்னரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் நலன் கருதி தேவையின் அடிப்படையில் கூடுதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி முயற்சி எடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கூ்டுதலாக 296 மையங்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், எமிஸ் ஒருங்கிணைப்பாளர் முருகுதிருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் நன்றி கூறினார்.

    Next Story
    ×