வயல்களில் மழைநீர் புகுந்து வெங்காயம்-மக்காசோள பயிர்கள் சேதம்

வயல்களில் மழைநீர் புகுந்து வெங்காயம்-மக்காசோள பயிர்கள் சேதமடைந்தது. எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை படத்தில் காணலாம்.
மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை படத்தில் காணலாம்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பருமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் விவசாய பணிகளை மும்முரமாக மேற்கொண்டு தங்களது நிலங்களின் தன்மைக்கு ஏற்ப நெல், சோளம், பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பல்வேறு வேளாண் பயிர்களை ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ளனர்.மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் தற்போது களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் விவசாய பணிகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்தும், கூடுதல் வட்டிக்கு வெளியில் கடன் வாங்கியும் பல்வேறு சிரமத் திற்கு இடையே விவசாய பணி களை மேற் கொண்டு வரு கின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் அப்பகுதியிலுள்ள பல்வேறு ஓடைகள் நிரம்பி அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மறவர் பெருங்குடி, எம்.மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, சலுக்கார்பட்டி, கஞ்சம்பட்டி, சுத்தமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, கம்பு போன்ற பல்வேறு பயிர்களின் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் மிகவும் சேதமடைந்தது. இதனால் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்துள்ள நிலையில் இவ்வாறு அறுவடை நேரத்தில் மழை வெள்ளம் புகுந்து வெங்காயம் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமான தால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந் துள்ளனர்.

மேலும் தற்போது 2023- 2024 க்கான நெல், சோளம், பருத்தி போன்ற பல்வேறு விளை பொருட்க ளுக்கு குறைந்த பட்ச பிரீமிய தொகையாக ரூ.120-ல் தொடங்கி அதிக பட்சமாக ரூ.500 வரை பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து வீணாகிய விளை பொருட்களால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணத்தை இழப்பீடு தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com