search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைவாழ் மக்களுக்கான நடமாடும் ரேசன்கடை
    X

    நடமாடும் ரேசன் கடையை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து மலைவாழ் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.

    மலைவாழ் மக்களுக்கான நடமாடும் ரேசன்கடை

    • வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான நடமாடும் ரேசன்கடையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகர் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறை மூலம் நடமாடும் நியாய விலை தொடங்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

    மேலும் 6 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ12.40லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ3.625லட்சம் மதிப்பிலான பால் கறவை மாட்டு கடன் உதவிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ6.18 லட்சம் மதிப்பிலான பயிர் கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.22.205 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 691 முழு நேர நியாயவிலை கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 31 முழுநேர கடைகளும், 3 பகுதி நேர கடைகளும் மற்றும் மகளிர் நிறுவனங்கள் மூலம் 4 முழு நேர கடைகளும் என மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 446 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

    மேலும் 64 நடமாடும் நியாயவிலை கடைகளும் செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

    அதன் அடிப்படையில் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நீண்ட தூரம் சென்று குடிமைப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும், தங்கள் பகுதிக்கு அருகிலேயே நியாய விலைக்கடை அமைத்து தரக்கோரியும் அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறையின் மூலம் 65-வது நடமாடும் நியாய விலைக்கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×