என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது விபரீதம்
- மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்பாண்டியன் (வயது 24) கூலி வேலை செய்து வந்தார்.
இன்று காலையில் பரத்பாண்டியன் தனது வீட்டு அருகே உள்ள நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் பரத்பாண்டியன் மின்கம்பியை மிதித்தார்.
அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால் அவரது பெற்றோர் நிலத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பரத்பாண்டியன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும் மின்வாரி யத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் டவுன் போலீசார் பரத் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்கம்பி அறுந்து விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.






