search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளுக்கு அருகே புகுந்த காட்டு யானைகள்
    X

    வீடுகளுக்கு அருகே புகுந்த காட்டு யானை,  அச்சத்துடன் இரவை கழித்த கிராம மக்கள்.

    வீடுகளுக்கு அருகே புகுந்த காட்டு யானைகள்

    • விடிய விடிய பீதியில் உறைந்த கிராம மக்கள்
    • விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.

    அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியில் உள்ள சைனகுண்டா, மோர்தானா, கொட்டமிட்டா, தனகொண்டபள்ளி, டி.பி. பாளையம், கொத்தூர், கதிர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர்.

    கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்றே குறைந்திருந்தது, ஆங்காங்கே ஓரிரு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைசேதப்படுத்தி வந்தது. விவசாயிகள் யானைகள் கூட்டம் குறைந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்தனர்.

    இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் இரண்டு குழுக்களாக தலா மூன்று என ஆறு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது அமாவாசை இருட்டு என்பதால் கிராம மக்கள் அருகே செல்ல அச்சமடைந்தனர் உடனடியாக இது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இரவு 10 மணி வரை வனத்துறையினர் யாருமே கொட்டமிட்டா பகுதிக்கு வரவில்லை செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போன் எடுப்பதில்லை எடுக்கும் ஓரிரு வனத்துறையினர் வருகிறேன் வருகிறேன் என்று கூறுவதாக கூறி விட்டு வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனையடுத்து அச்சமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மேளங்கள் அடித்து பட்டாசு வெடித்து குடியிருப்பு பகுதிக்கு நுழையா வண்ணம் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வனத்துறையினர் உரிய நேரத்திற்கு வந்து யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விடாததால் விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகளால் விவசாயிகளுக்கு பெருத்த சேதாரம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    யானைகள் வீடு அருகே நின்றதால் அச்சத்துடன் பொதுமக்கள் இரவை கழித்தனர்.

    வேலூர் கலெக்டர் யானைகள் பிரச்சனையில் தனி கவனம் செலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    யானைகளை விளைநிலங்களுக்குள் தடுக்க நடவடிக்கை எடுக்காத வனத்து றையினரை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரவு 10 மணிக்கு மேல் வனத்துறையினர் கொட்டமிட்டா பகுதிக்கு வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்

    அப்போதும் அந்த யானைகள் கூட்டம் கிராம மக்கள், வனத்துறை யினருக்கு போக்குக்காக காட்டி விட்டு பக்கத்தில் உள்ள மேல்கொல்லப்பல்லி கிராமத்திற்கு நுழைந்து ஏராளமான பயிர்களை நாசம் செய்ததாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×