என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
- போக்குவரத்து பாதிப்பு
- ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி ஊராட்சி பூசாரிவலசை பகுதியில் பக்காசூரன்பட்டி, ஆலங்கனேரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
அதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை பரதராமி-பனமடங்கி செல்லும் சாலையில் பூசாரிவலசை கிராமத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இரு புறமும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்காக வெளியூர் செல்லும் கிராம மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதனை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






