என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாசில்தார் மீது சரமாரி தாக்குதல்
- திருச்சியில் வீட்டை ஜப்தி செய்ய சென்ற துணை தாசில்தார் மீது சரமாரி தாக்குதல் நடைபெற்றது
- நடவடிக்கை எடுக்க கோரி வருவாய் ஊழியர்கள் போராட்டம்
கே.கே.நகர்,
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன் வாங்கினர். பின்னர் 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின்படி காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர்.
அப்போது, அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் துணை தாசில்தாரையும் வங்கி ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த துணை தாசில்தார் பிரேம்குமார், வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் அரசு தலைமை மருத்துவமனையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட முயன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது இதுவரை காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று வருவாய்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.






