என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேஜர் சரவணனின் 24-ம் ஆண்டு நினைவு தினம்
- மேஜர் சரவணனின் 24-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
- அமைச்சர் கே.என்.நேரு மலர் வளையம் வைத்து அஞ்சலி
திருச்சி,
கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகங்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்து விட்ட பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன்.அவரின் வீர தீர செயல்களை பாராட்டி இந்திய அரசு பாட்டாலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது.இந்நிலையில் இன்று அவரது 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள அவரது நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேஜர் சரவணனின் சகோதரி மருத்துவர் சித்ரா மற்றும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.






