search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறில் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.

    செய்யாறில் பொதுமக்கள் சாலை மறியல்

    • வாலிபர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி நடந்தது
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செய்யாறு:

    செய்யாறு கொட நகர் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26) .இவரது மனைவி ரூபினி (25). இவர்களுக்கு கிருத்திக் என்ற 1½ வயது ஆண் குழந்தை உள்ளது. திருநாவுக்கரசு செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    அதில் பங்குதாரராக இருந்த ஒருவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார். அவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலுடன் சென்று தனது பங்குத்தொகை ரூ. 60 ஆயிரத்தை கேட்டு கடந்த 27-ந் தேதி திருநாவுக்கரசை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அந்த கும்பல் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்து கொண்டு நிதி நிறுவனத்தை பூட்டிச் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் மறுநாள் 28-ந் தேதி காலையில் பொன்னியம்மன் கோவில் அருகே திருநாவுக்கரசை மீண்டும் அழைத்து பணம் கொடுத்துவிட்டு சாவி வாங்கிக் கொண்டு செல் என்று கூறி அவரை மீண்டும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருநாவுக்கரசு 29-ந் தேதி காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி ரூபினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செய்யாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் திருநாவுக்கரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ரூபிணி தனது கணவர் சாவுக்கு 5 பேர் கொண்ட கும்பல் தான் காரணம் அவர்களை கைது செய்யக்கோரி உறவினர்களுடன் ஆற்காடு செய்யாறு சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த செய்யாறு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×