search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    X

    வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட காட்சி.

    பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    • முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    வந்தவாசி :

    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னாவரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி செயலர் காலி பணியிடத்துக்கான நேர்காணலில் பங்கேற்றாராம்.

    இந்த நிலையில் அந்த பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்து நந்தினி மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நந்தினி கூறியதாவது:

    சென்னாவரம் ஊராட்சி செயலர் பணிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நேர்காணலில் பங்கேற்றேன். அப்போது, அந்த ஊராட்சியில் தகுதியான விண்ணப்பதாரர் இல்லாவிட்டால் அந்த ஊராட்சி எல்லையை ஒட்டியுள்ள ஊராட்சியை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர் என நிபந்தனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி சென்னாவரத்தை ஒட்டியுள்ள பிருதூர் ஊராட்சியை சேர்ந்த எனக்குத்தான் இந்த பணி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் வேறு ஒரு ஊராட்சியை சேர்ந்தவருக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தகவலறிந்தோம்.

    எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி தெற்கு போலீசார் சமரசம் செய்ததின் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாைல மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×