search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் தனி கவுண்டர்
    X

    கோப்புபடம்.

    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் தனி கவுண்டர்

    • மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • செப்டம்பர் 30ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.இவ்வகை ரூபாய் நோட்டு எப்போது வேண்டுமானாலும் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற பேச்சும் இருந்து வந்தது. காரணம் 2,000 ரூபாய் நோட்டு, பணம் பதுக்கலுக்கு அதிகம் பயன்படும் என்ற அச்சம் இருந்தது.

    தற்போதும் பல்வேறு வகையில் பணம் பதுக்கல் அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் கைக்கு 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவே இல்லை. ரிசர்வ் வங்கி, 2018-19 ம் ஆண்டில் இருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தியது. இந்நிலையில் 2,000 ரூபாய்கள் நீக்கம் செய்யப்படுவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வசம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை தங்கள் வங்கி கணக்கில் 'டிபாசிட்' செய்து கொள்ளலாம். வேறு எந்த வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை அளித்து அதற்கு இணையான மற்ற ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் சாதாரண மக்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் இல்லாததால், பெரிய பரபரப்பு எழவில்லை. அப்படியே கைவசம் இருந்தாலும் எவ்வித கவலையும் தேவையில்லை. நான்கு மாத அவகாசம் இருப்பதால் நாளை முதல் பதட்டமில்லாமல் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என சிறப்பு ஏற்பாடு செய்துள்ள வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

    இதுகுறித்து திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:- நாளை 23-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.அதற்காக, வங்கி கிளைகளில் சிறப்பு கவுண்டர் திறக்கப்படும்.ஆதார், பான்கார்டு போன்ற ஏதாவது ஆவண விவரங்களுடன், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்., மையங்கள் வாயிலாகவோ, நேரடியாகவோ, தங்கள் வங்கி கணக்கில் செலுத்திக்கொள்ளலாம்.அதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டும், படிவத்தை பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் எவ்வகையிலும் பதற்றமடைய தேவையில்லை. நான்கு மாதம் அவகாசம் உள்ளது. கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பான முறையில் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம். 500, 200, 100, 50 ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். போதிய அளவுக்கு ரூபாய் நோட்டுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×