search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - டி.எஸ்.பி.,அறிவுறுத்தல்
    X

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா. 

    ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - டி.எஸ்.பி.,அறிவுறுத்தல்

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
    • உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது :- தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி நபர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்யாத உணவுகள் உங்களுக்கு வந்திருப்பதாக கூறி, அதை திருப்பி அனுப்ப உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.மேலும் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, நீங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது. தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஏ.டி.எம்.,.மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை.

    வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.இது போன்ற அழைப்புகள் வந்தால், நேரில் வருவதாக கூறி உடனடியாக போலீஸ் உதவியை பொதுமக்கள் நாட வேண்டும். மேலும் அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை சைபர் கிரைம் குற்றவாளிகள், உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் டேட்டாக்களை திருடுகின்றனர்.எனவே தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது.

    சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் சமூக வலைதள நட்பு வைக்க வேண்டாம்.எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டிஜிட்டல் மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×