பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை.
கூட்டம் நடைபெற்ற காட்சி.
கூட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வக்கீல் எஸ்.குமார் தலைமையில் துணைத்தலைவர் அபிராமி அசோகன் முன்னிலையில் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் லோகுபிரசாத் (திமுக) பேசுகையில்: கள்ளகிணறு கருப்பராயன் கோயில் முதல் லட்சுமி நகர் வரை தார் சாலை அமைத்தல் பணி முடிந்து அதனை தொடர்ச்சியாக உள்ள மண் சாலை வழியாக, ஒரு பாலம் அமைத்து கொடுத்து மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

ஜோதி பாசு(இ.கம்யூ) : கடகம்திருடியபாளையத்திலிருந்து டி. ஆண்டிபாளையம் வரையிலும், வேலம்பட்டியில் இருந்து மசநல்லாம் பாளையம் வரையிலும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை. இதில் மொத்தம் 1400 பயனாளிகளில் 400 பயனாளிகளின் ஆதார் கார்டு இணைப்பு ஆகவில்லை என வேலைக்கு அனுமதிக்காத நிலை உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். டி. ஆண்டிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக செய்து தர வேண்டும்.

சுப்பிரமணி(தி.மு.க) : பொல்லிக்காளிபாளையம் செல்லும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக நல்ல காளிபாளையம் வழியாக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். .ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் பேசுகையில்: பொங்கலூர் ஒன்றியத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஒன்றிய பகுதியில் அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவில் 75 சதம் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக குடிநீர் வடிகால் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 15வது நிதிக்குழு மானியம் நிதியில் அனைத்து ஒன்றிய குழு வார்டு பகுதிகளிலும் 7 பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற அடிப்படை மேம்பாட்டு வேலைகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) மீனாட்சி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com