

திருப்பூர்:
ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.
இதனிடையே இதய நோய்களில் இருந்து தப்பிப்பது மற்றும் இதயத்தை நலமுடன் பாதுகாப்பது ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பார்க் சாலை வழியாக சென்று மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது. இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 1 -வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.