search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்  88 அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணை
    X

    நியமன ஆணைகளை வழங்கிய காட்சி.

    இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 88 அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணை

    • இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்
    • பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள 88 திருக்கோவில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படாத கோவில்களுக்கு உறுப்பினர்களை நியமித்து விரைவில் நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால்தான் திருக்கோவில்களில் இருக்கக்கூடிய துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து குடமுழுக்கு நடைபெறாத திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கும் மற்றும் பராமரிக்கப்படாத திருக்கோவில்களை மேம்படுத்தும் பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும். நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில்களை நல்ல முறையில் பராமரித்து கோவில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கே வரக்கூடிய பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

    கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உரிய முறையில் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு அந்த கோவில்களிடம் ஒப்படைத்து அந்த கோவில்களுக்கு கூடுதலாக நிதிகளை பெற்று சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் இந்த நியமன ஆணைகளை பெற்றுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கோவில் நல்ல முறையில் பராமரித்து செயல்பட வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர்கள் ஜெய தேவி, அண்ணக்கொடி,திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், காங்கேயம் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×