என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 6 நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
- 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
- சட்ட விதிகளை மீறி வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது.
திருப்பூர்:
தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் மற்றும் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் வளரிளம் பருவ தொழிலாளர் தொழில் நிறுவனங்களில் அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் சட்ட விதிகளை மீறி வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட 6 நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
மாவட்ட தடுப்பு படையின் மூலமாக இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 14 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.






