என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரை கொலை செய்த புதுமாப்பிள்ளை கைது
- காதல் தகராறில் விபரீதம்
- ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சண்முகம் (வயது 30).
இவர் அதேப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சண்முகத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்து விட்டது.
அதேபோல் அவர் காதலித்த பெண்ணிற்கும், வாலிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் நடைபெற உள்ள நிலையில் சண்முகம், தனது காதலிக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள வாலிபருடன் பேசி இளம்பெண் குறித்து தவறாக கூறி உள்ளார்.
இதனை பார்த்த பெண்ணின் சித்தப்பா அவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஆதியூர் மாரியம்மன் கோவில் அருகே சண்முகத்திற்கும், அவரது பழைய காதலியின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சண்முகம் காதலித்த பெண்ணின் உறவினரான கவுசல்யா என்பவரைகத்தியால் தாக்கி கையில் கிழித்து உள்ளார். மேலும் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் ஆதியூர் ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர் மகன் வல்லரசு (25) என்பவரின் மார்பிலும் கத்தியால் சண்முகம் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த வல்லரசு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, வல்லரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓட முயன்ற சண்முகத்தையும் கைது செய்தனர்.






