search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குனியமுத்தூரில் சிக்னல் அருகே பஸ் நிறுத்தம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல்
    X

    குனியமுத்தூரில் சிக்னல் அருகே பஸ் நிறுத்தம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல்

    • இடம் மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • கேரளா செல்லும் பஸ்கள், லாரிகள் அனைத்தும் பாலக்காடு சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவையின் பிரதான சாலைகளில் பாலக்காடு சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கேரளா செல்லும் பஸ்கள், லாரிகள் அனைத்தும் பாலக்காடு சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். இத்தகைய பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் எந்த நேரமும் அதிக கூட்டமாக காணப்படும். இந்த பஸ் நிறுத்தம் குனியமுத்தூர் சிக்னலில் அமைந்துள்ளது.

    குனியமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, சாவடி, வாளையார், கோவைபுதூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இந்த சிக்னலில் நின்று செல்லும். மேலும் பாலக்காடு, திருச்சூர் ஆகிய பகுதிக்கு செல்லும் பஸ்கள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்லும்.

    சிக்னலை ஒட்டி பஸ் நிறுத்தம் அமைந்துள்ளதால், ஒவ்வொரு முறையும் சிக்னல் போடும்போது, அனைத்து பஸ்களும் அணிவகுத்து நிற்கும் காட்சியை காண முடிகிறது. மேலும் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களும் ,லாரிகளும் வரிசையாக நின்று கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ஒருநாளைக்கு ஏராளமான லாரிகளும், பஸ்களும், கார்களும் இச்சாலையில் பயணிக்கிறது. பஸ் நிறுத்தம் சிக்னலை ஒட்டி அமைந்திருப்பதால் பகுதியை கடந்து செல்வதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. இது தவிர இரு சக்கர வாகனங்கள் குறுக்கே புகுந்து தாறுமாறாக செல்வதால் மிகவும் சிரமமான நிலை ஏற்படுகிறது.

    சாலையின் வலதுபுறமும், இடது புறமும் பிரதான வீதிகள் அமைந்துள்ளது. ஏனெனில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவ்வப்போது குறுக்கும் நெடுக்குமாக சென்று வருகின்றனர். இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாகி விடுகிறது.

    மேலும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளுக்கு நிழல் குடையும் கிடையாது. எனவே வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் அவல நிலைதான் உள்ளது. மேலும் நிழற்குடை இல்லாத காரணத்தால் பஸ்சை எதிர்பார்த்து நிற்கும் பயணிகள் நடுரோட்டில் வந்து நிற்கின்றனர்.

    இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சிக்னல் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தை சற்றுத்தள்ளி அமைத்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×