search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பாளையம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உடல்
    X

    கோவில்பாளையம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உடல்

    • கோவில்பாளையம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • முட்புதரில் குழந்தையை மர்மநபர் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கருவலூர் ரோட்டில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி அருகே கவுசிகா நதி செல்கிறது. இந்த நதிக்கரையில் உள்ள முட்புதரில் பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும் என்பது தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடலில் எறும்பு கடித்த காயங்கள் மட்டுமே இருந்தது. வேறு எந்த காயமும் இல்லை.

    பின்னர் கோவில்பாளையம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வீசி சென்றார்களா அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடை களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் குழந்தையை வீசி சென்ற மர்மநபர் வந்து செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    முட்புதரில் குழந்தையை மர்மநபர் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×