search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற கும்பல்
    X
    கொலை செய்யப்பட்ட குட்டிமயில் என்ற பெருமாள்

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற கும்பல்

    • திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலப்பிரச்சினையில் விவசாயி கொல்லப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே பொன்மாந்துறையை சேர்ந்தவர் குட்டிமயில் என்ற பெருமாள்(26). இவர் நேற்றிரவு பொன்மாந்துறை புதுப்பட்டி ஆற்றுப்பாலம் சுடுகாடு பகுதியில் வீரமணி, சேசுராஜ், தமிழ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார்.

    அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடித்து மோதிக்கொண்டனர். அப்போது குட்டிமயில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நண்பர்களை மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் குட்டிமயிலை கத்தியால் முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினர்.

    ரத்தகாயங்களுடன் சரிந்த குட்டிமயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து வந்து குட்டிமயில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீரமணி, சேசுராஜ், தமிழ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் எதிரே பர்னிச்சர் கடை நடத்தி வந்த மணிகண்டன் என்பவர் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் குட்டிமயில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலப்பிரச்சினையில் விவசாயி கொல்லப்பட்டார். இதேபோல் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×