search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே குடிபோதையில் வெறிச்செயல்: தாய் உள்பட 2 பேரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது
    X

    நத்தம் அருகே குடிபோதையில் வெறிச்செயல்: தாய் உள்பட 2 பேரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோசுக்குறிச்சி கரையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இவருக்கு முத்துலட்சுமி (35) என்ற மனைவியும், நதியா (14) என்ற மகளும் உள்ளனர். நதியா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் ஈஸ்வரனின் தாய் செல்லாயி (75) என்பவரும் வசித்து வந்தார். ஈஸ்வரனுக்கு சொந்தமான வயல் இருந்ததால் அதனை பார்த்துக் கொண்டு பசுமாடுகள் வளர்த்து பால் விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

    ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மது குடித்துவிட்டு வருவதை தாய் மற்றும் மனைவி கண்டித்துள்ளனர். அவர்களுடன் ஈஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார்.

    நேற்று இரவு 11.30 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரனை மனைவி மற்றும் தாய் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அரிவாளால் தனது தாய் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதைப் பார்த்ததும் மனைவி மற்றும் மகள் நதியா ஆகியோர் கதறி அழுதனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான பெரியாண்டி (80) என்பவர் எழுந்து வந்தார். அவரையும் ஈஸ்வரன் அரிவாளால் பயங்கரமாக வெட்டினார். இதில் பெரியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாட்டையும் வெட்டினார். இதைப் பார்த்ததும் மகள் நதியா தடுக்க முயன்றார். இருந்த போதும் அவரது 2 கைகளையும் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் நதியா மயங்கி விழுந்தார்.

    கையில் அரிவாளுடன் தனக்கு எதிரே வந்த அனைவரையும் வெட்ட முயன்றதால் அவர் அருகில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் ஒருவழியாக அவரை பிடித்து கால்களை கட்டினர். அதன் பிறகு நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் தலைமையிலான போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தாய் உள்பட 2 பேரை வெட்டி சாய்த்ததுடன் மகளையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×