search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுந்தப்பாடி அருகே  சமையல் தொழிலாளி கொலை: போலீசார் தீவிர விசாரணை
    X

    கவுந்தப்பாடி அருகே சமையல் தொழிலாளி கொலை: போலீசார் தீவிர விசாரணை

    • கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் ஆண்டிபாளையம் ரோட்டில் செங்கல் சூளை பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டம் அருகே சின்ன கிளை வாய்க்கால் செல்லும் பாலம் மீது இன்று காலை சுமார் 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில கிடந்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். இதில் அவருக்கு உடலில் ரத்த காயங்கள் மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது தெரிந்தது.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் விசாரணையில் அவர் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 46) என்பதும், அவர் சமையல் தொழிலாளி என்றும், அவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், தட்சின் (18), கிஷோர் (16) என்ற 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது.

    மேலும் கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×