என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் பணத்தை திருப்பி கொடுக்காததால் ஏலச்சீட்டு அலுவலகத்தில் தீக்குளித்த தொழிலாளி பலி
- சுப்பையா கடந்த 15 மாதங்களாக கட்டிய ரூ.50ஆயிரம் பணத்தை திருப்பி தருமாறு செல்வத்திடம் கேட்டு வந்தார்.
- மனவேதனை அடைந்த சுப்பையா கடந்த 30-ந் தேதி தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு செல்வத்தின் அலுவலகத்திற்கு வந்தார்.
போரூர்:
சென்னை கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது56). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
இவர் எம்.ஜி.ஆர் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் நடத்தி வந்த ரூ.1 லட்சம் ஏலசீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார். ஆனால் அவரால் தொடர்ந்து சீட்டு பணம் கட்ட முடியவில்லை என்று தெரிகிறது.
இதனால் சுப்பையா கடந்த 15 மாதங்களாக கட்டிய ரூ.50ஆயிரம் பணத்தை திருப்பி தருமாறு செல்வத்திடம் கேட்டு வந்தார்.
ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுப்பையா கடந்த 30-ந் தேதி தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு செல்வத்தின் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென தீக்குளித்தார். மேலும் அவரை தடுக்க முயன்ற அங்கிருந்த பெண் ஊழியர் காயத்ரி என்பவரையும் எரியும் தீயுடன் சுப்பையா பிடித்துக் கொண்டார்.
இதில் இருவரும் உடல் கருகி பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பையா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெண் ஊழியர் காயத்ரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






