என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட தனலட்சுமி தனது மகன்கள் மற்றும் கணவருடன் உள்ள பழைய படம்.
அலங்காநல்லூர் அருகே 2 மகன்களுடன் பெண் விஷம் குடித்து தற்கொலை
- கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- குடும்ப தகராறில் 2 மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (38).
இவர்களது மகன்கள் ஹரி கிருஷ்ணன்(14), குபேந்திர கிருஷ்ணன் (12). இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்தனர். ஹரிகிருஷ்ணன் 9-ம் வகுப்பும், குபேந்திர கிருஷ்ணன் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அய்யனார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அய்யனார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்.
வீட்டில் தனலட்சுமி தனது 2 மகன்களுடன் இருந்துள்ளார். கணவருடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதன்படி தனலட்சுமி தனது 2 மகன்களுக்கும் விஷத்தை குடிக்க கொடுத்து விட்டு, தானும் குடித்தார். இதில் அவர்கள் 3 பேரும் இறந்து விட்டனர். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த அய்யனார் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரமாக தட்டியும் தனலட்சுமி திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அய்யனார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனலட்சுமி மற்றும் 2 மகன்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
மனைவி மற்றும் மகன்கள் பிணமாக கிடந்ததை கண்டு அய்யனார் அதிர்ச்சி அடைந்தார். மனைவி மற்றும் மகன்கள் இறந்துவிட்டதால் தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர், மீதம் இருந்த விஷத்தை அவர் குடித்து விட்டார்.
நள்ளிரவில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அய்யனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு அய்யனார் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததையும், தனலட்சுமி மற்றும் அவரது மகன்கள் பிணமாக கிடந்ததையும் பார்த்த அவர்கள், அது குறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரமும் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர்கள் உயிருக்கு போராடிய அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தற்கொலை செய்து கொண்ட தனலட்சுமி மற்றும் அவரது 2 மகன்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக அய்யனாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
அய்யனார் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரிடம் போலீசாரால் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. அபாய கட்டத்தை தாண்டியதும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
குடும்ப தகராறில் 2 மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.






