search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் அதிபரை தாக்க கூலிப்படைக்கு ரூ.3 லட்சம் கொடுத்த மனைவி தோழியுடன் கைதானார்
    X

    தொழில் அதிபரை தாக்க கூலிப்படைக்கு ரூ.3 லட்சம் கொடுத்த மனைவி தோழியுடன் கைதானார்

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • சண்முக பிரியா அவருடன் வேலை பார்க்கும் மாரியம்மாளிடம் தகராறு குறித்து கூறி உள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் துறையூர் மேட்டில் தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சண்முக பிரியா (34). இவர் ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு தனது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கேட்ட போது கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து சண்முக பிரியா அவருடன் வேலை பார்க்கும் மாரியம்மாளிடம் கூறி உள்ளார். மேலும் தன்னுடைய கணவரை தண்டிக்க வேண்டும் என கூறினார். பின்னர் இவர்கள் 2 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி படுகாயம் ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி மதுரையை சேர்ந்த 8 பேர் கொண்ட கூலிப்படையை ரூ.3 லட்சத்துக்கு பேசி முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று மணிகண்டன் தனது டிரைவர் கார்த்திக் என்பவருடன் தொழிற்சாலையில் இருந்தார். அப்போது வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அவர் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்தார். அப்போது அதில் தொழிற்சாலைக்கு வெளியே சிலர் நிற்பது தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் வெளியே சென்று உங்களுக்கு யார் வேண்டும் என கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து 8 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து மணிகண்டன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிகண்டனின் மனைவி சண்முக பிரியா மாரியம்மாளுடன் சேர்ந்து ரூ.3 லட்சம் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தனது கணவரை தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சண்முகபிரியா, மாரியம்மாள் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×