search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்?- உருக்கமான கடிதம் சிக்கியது
    X

    ஜேடர்பாளையம் அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்?- உருக்கமான கடிதம் சிக்கியது

    • கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • சசிகலா அவரது 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு தீபித் (5), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, நேற்று அதிகாலையில் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருக்கு சொந்தமான விவசாய கிணறு இருக்கும் இடத்திற்கு வந்தார். பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சசிகலா அவரது 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிந்து நேற்று இரவு உடலை சசிகலாவின் தந்தை பழனிசாமி, அவரது தாயார் தெய்வானை மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தினமும் தகராறு ஏற்பட்டதால் தான் சசிகலா தானும், குழந்தைகளும் இறந்து விட வேண்டும் என்ற சோகமான முடிவுக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே சசிகலாவின் தாய் மாமன் கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் சசிகலாவின் வீட்டில் உள்ள அறைகளை சோதனை செய்துள்ளார். அப்போது சசிகலா ஒரு சிறிய பாக்கெட் நோட்டில் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அந்த நோட்டை கைப்பற்றி நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அந்த கடிதத்தில் எனது கணவர் தனசேகரன் தினமும் குடித்து விட்டு மது போதையில் வந்து தகராறில் ஈடுபட்டு வருகிறார். எனது கணவருடைய சகோதரி தீபாவை அருகாமையில் உள்ள சிறுநல்லிக்கோவில் பகுதியில் உள்ள பூசாரி தோட்டம் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் அவர், அங்கு செல்லாமல் , இங்கேயே இருந்து வருகிறார். தொடர்ந்து எனது கணவர் தனக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

    தனக்கு 20 பவுனுக்கு மேல் தங்க நகை போட்டனர். அனைத்து நகைகளையும் தனசேகரன் வாங்கிக் கொண்டார். மேலும் தனசேகரன், எனது தந்தை பழனிசாமியிடமிருந்து இதுவரை சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் என்னை நிம்மதியாக வைத்திருக்கவில்லை.

    தினமும் தகராறு ஏற்பட்டுள்ளதால் என்னால் நிம்மதியாக உயிர் வாழ முடியவில்லை. எனது சாவுக்கு காரணம் எனது கணவர் தனசேகரன் தான்.

    இவ்வாறு சசிகலா கண்ணீர் மல்க உருக்கமாக அதில் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சசிகலாவின் உறவினர்கள், தனசேகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா, நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் தனசேகரனை பிடித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×