என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலகவுண்டன்பட்டி அருகே கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த கட்டிட தொழிலாளி குத்திக் கொலை- உறவினர் கைது
- சீனு, மீனாவுடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- கொலை சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே அக்லாம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சீனு (வயது 23). கட்டிட வேலை செய்யும் கூலித் தொழிலாளி.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா (35) என்பவரின் மனைவி மீனாவிற்கும் (29) நீண்ட நாட்களாக கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேலின் மகன் பிரவீன்குமார் என்கிற குணா (21). சென்டரிங் வேலை செய்து வருகிறார். சத்யா இவருடைய தாய்மாமன் ஆவார். இதையடுத்து, சீனுவிடம் தனது தாய்மாமன் சத்யாவின் மனைவி மீனாவுடனான கள்ளத் தொடர்பை கைவிடுமாறு, பிரவீன்குமார் பலமுறை எச்சரித்துள்ளார்.
ஆனால் சீனு, மீனாவுடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் சீனுவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அதன்படி நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், சீனுவின் வீட்டிற்கு சென்ற பிரவீன்குமார், அங்கு தூங்கிக் கொண்டிருந்த சீனுவை தான் தயாராக கொண்டு வந்திருந்த கத்தியால் பலமுறை சரமாரியாக குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த சீனு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பிரவீன்குமார், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில், கொலை சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
அங்கிருந்த சீனுவின் உடலை உடனடியாக மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சீனுவை கொலை செய்து விட்டு தப்பியோடிய பிரவீன்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் தாய்மாமன் மனைவியுடனான கள்ளத் தொடர்பை கைவிடாத ஆத்திரத்தில் கூலித்தொழிலாளியை வாலிபர் குத்திக் கொலை செய்த சம்பவம், வேலகவுண்டன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






