search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்து கையெழுத்து போடாவிட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்- டி.டி.வி. தினகரன்
    X

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்து கையெழுத்து போடாவிட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்- டி.டி.வி. தினகரன்

    • பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது.
    • தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பதை போன்று அ.தி.மு.க.வும் வேட்பாளர் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளதால் ஓ.பி.எஸ்., பா.ஜ.க.வின் நிலைப்பாடு அறிவிப்புக்கு பின் முடிவு எடுப்பதாக சொல்லி உள்ளார்.

    தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குறிக்கோள். அதற்காக இரவு, பகல் பாராது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபடுகிறார்கள்.

    மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மிகப்பெரிய அறிஞர். அவரின் நினைவாக பேனா சின்னம் வைப்பது தவறில்லை. கடுமையாக நிதி நெருக்கடியில் அரசு இருக்கும்போது தி.மு.க. கட்சியின் சார்பாக அந்த சின்னத்தை வைத்துக் கொள்ளலாம் .

    கடலில் வைத்து சுற்றுச்சூழலை மாசுபடச் செய்யாமல் அறிவாலயம் உள்ளிட்ட தி.மு.க.வின் சொந்த இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் பணியாற்றினால் தி.மு.க.வை வீழ்த்தலாம் என்பது என்னுடைய கருத்து. இதையே தான் ஓபி.எஸ்.சும் சொல்லி உள்ளார். ஓ.பி.எஸ். வேட்பாளர் அறிவிக்கிறாரா? என்பதை பார்த்து அவரது நிலைப்பாட்டை அறிந்து, இணைந்து பணியாற்றுவது குறித்து முடிவெடுக்கலாம். இன்னும் நேரம் இருக்கிறது.

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இரட்டை இலை சின்னத்திற்கு சண்டையிட்டால் 2017-ல் நான் போட்டியிடும் போது நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் இருவருக்கும் இல்லை என்ற முடிவெடுத்ததை போல் கூட முடிவெடுக்கலாம்.

    பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது. தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.

    களத்தில் தனியாக இறங்கி நின்று காங்கிரஸ் போட்டி போட்டால் அவரது நிலை தெரியும்.

    இரட்டை இலை சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும் என்பதை நிலைப்பாடாக கொண்டுள்ளது.

    இருவரும் இணைந்து கையொப்பம் இடவில்லை என்றால் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக அ.தி.மு.க. இன்று பலவீனம் அடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.

    சுயநலத்தோடும் பணத்திமிரிலும் சிலர் செயல்படுவதால் தான் 5 ஆண்டுகளுக்கு முன்பே அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டோம்.

    கடந்த தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வருங்காலத்தில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் போராடுகிறோம். தி.மு.க. வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் வரும். காலம் அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×