திருமங்கலம் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து- கிளீனர் பலி

உசிலம்பட்டி, மேட்டுப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பட்டி-தாழையூத்து ரோட்டில் சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் பயங்கரமாக மோதியது.
மரத்தில் மோதி நிற்கும் பள்ளி வேன்.
மரத்தில் மோதி நிற்கும் பள்ளி வேன்.
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இன்று காலை மாணவ-மாணவிகளை அழைத்துவர பள்ளி வேன் புறப்பட்டு சென்றது. வேனை அதே பகுதியை சேர்ந்த சாந்த குமார் என்பவர் ஓட்டினார். கிளீனரான டி.கரிசல்பட்டியை சேர்ந்த போதராஜ் (50) உடன் சென்றார்.

உசிலம்பட்டி, மேட்டுப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பட்டி-தாழையூத்து ரோட்டில் சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் முன்னால் அமர்ந்திருந்த போதராஜ் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். வேனில் பயணித்த உசிலம்பட்டியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர் கிஷோர், எல்.கே.ஜி. மாணவி பர்வினாஸ்ரீ உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் லேசான காயம் அடைந்தனர்.

உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக சிந்து பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவர் சாந்த குமாரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com