என் மலர்
உள்ளூர் செய்திகள்

1½ வயது குழந்தையை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை
- ஒரே சேலையில் தாய்-மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர்.
- குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 30). இவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவரது மகள் பிரவீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோர் ஊருக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு காலையிலேயே புறப்பட்டு சென்றுவிட்டனர். பிரவீனாவும், அவரது குழந்தையும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை நேரத்தில் முத்துப்பாண்டி தனது மகள் பிரவீனாவை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள அறையில் ஒரே சேலையில் தாய்-மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த முத்துப்பாண்டி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரவீனா, அவரது குழந்தை அகிமா ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீப காலமாக பிரவீனாவுக்கும், மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதங்கள் எழுந்து வந்துள்ளது. அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீனா தனது குழந்தையின் கழுத்தில் சேலையை கட்டி இறுக்கி கொலை செய்துவிட்டு, அந்த சேலையின் மற்றொரு முனையில் தனது கழுத்தை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனினும் குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






