என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அருகே 4 வயது சிறுவனை கொன்று தாய்-பாட்டி தற்கொலை
    X

    தாராபுரம் அருகே 4 வயது சிறுவனை கொன்று தாய்-பாட்டி தற்கொலை

    • ஜோதிபாசு வெளியே சென்றிருந்த சமயத்தில் எலி மருந்தை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து 2பேரும் குடித்தனர்.
    • 4 வயது சிறுவனை கொன்று தாய்-பாட்டி தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார பகுதியை சேர்ந்தவர் அம்மாப்பட்டியான்(வயது 62), தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (55). இவர்களது மகள் நந்தினி (35). இவருக்கும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காரியாப்பெட்டிவலசு பகுதியை சேர்ந்த ஜோதிபாசு என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன் திலக் கலாம் (4).

    தமிழரசி கத்தார் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் நாடு திரும்பினார். இதையடுத்து அவர் தனது மகள் நந்தினியுடன் திருப்பூர் மாவட்டம் மூலனூர் கன்னிவாடி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மருமகன், பேரனுடன் வசித்து வந்தார். நந்தினி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் அவர்கள் குடியிருந்த வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இதையடுத்து தமிழரசி தனது மகள் நந்தினியிடம் சொந்தமாக வீடு ஒன்றை கட்டலாம் என தெரிவித்துள்ளார். தமிழரசி கத்தாரில் வேலை செய்யும் போது கிடைத்த பணத்தை ஊரில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதனை உறவினர்கள் செலவு செய்து விட்டனர். இதனால் நந்தினி, தனது தாய் தமிழரசியிடம் , கத்தாரில் வேலை செய்த பணத்தைதான் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டாயே என்று கோபப்பட்டுள்ளார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த 2பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். ஜோதிபாசு வெளியே சென்றிருந்த சமயத்தில் எலி மருந்தை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து 2பேரும் குடித்தனர். மேலும் 4 வயது சிறுவன் திலக்கலாமுக்கும் கொடுத்தனர். அதனை குடித்த சிறிது நேரத்தில் 3பேரும் மயக்கமடைந்தனர். திலக்கலாம் சம்பவ இடத்திலேயே இறந்தான். தமிழரசியும், நந்தினியும் உயிருக்கு போராடினர். மகன் இறந்ததால் மிகவும் மனமுடைந்த நந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    தமிழரசி உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார். இந்தநிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே நந்தினி தூக்கில் பிணமாக தொங்கியதுடன், திலக்கலாம் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த தமிழரசியை மீட்டு சிகிச்சைக்காக மூலனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நந்தினி, திலக்கலாம் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசி இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். வீடு பிரச்சினையில் இந்த தற்கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 வயது சிறுவனை கொன்று தாய்-பாட்டி தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×