search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டும்- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
    X

    வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டும்- அமைச்சர் துரைமுருகன் பேச்சு

    • குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
    • தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தல் பணி குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.

    எனது 60 ஆண்டு கால அரசியலில் இந்தியாவில் மிகச்சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது சுதந்திர தினத்தில் முதல்வர் கொடி ஏற்றுதல் என மாநிலத்திற்கான கூடுதல் அதிகாரங்களை பெற்றார். அப்போது இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களும் கருணாநிதியை திரும்பி பார்த்தனர். அதேபோன்று நிலையை அவரது மகனான ஸ்டாலினும் பெற்றுள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் டெல்லி சென்று பிரதமர்களை சந்தித்து எத்தனையோ திட்டங்களையும் உரிமைகளையும் பெற்று தந்தார்.

    ஆனால் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்தபடியே டெல்லியை ஆட்டி படைக்கிறார். தந்தையை மிஞ்சும் தனயனாக கருணாநிதியை மிஞ்சும் மகனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதற்காக தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருணாநிதிக்காக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன்,

    கருணாநிதி தனது எழுத்துக்களால் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபட்டுள்ளார். அவரின் பேனாவுக்கு வலிமை ஜாஸ்தி.

    அண்ணாவே அவரது எழுத்துக்களை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட பேனாவை பாக்கெட்டுக்குள் வைப்பது சரியல்ல. அதை நினைவு சின்னமாக கொண்டு வருவதில் தவறு ஏதும் இல்லை.

    தேர்தல் களத்தில் டாக்டர் பட்டம் பெற்ற தி.மு.க. முன்னணி தலைவர்கள் இந்த தேர்தலில் பணியாற்றுவதால் எதிரணியை பற்றி கவலை இல்லை. எதிர்க்கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் சொல்லும். எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்.

    Next Story
    ×