search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ம.தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை: திருப்பூர் துரைசாமி பேட்டி
    X

    ம.தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை: திருப்பூர் துரைசாமி பேட்டி

    • ம.தி.மு.க. பெருங்காய டப்பா போல காலியாக உள்ளது. ம.தி.மு.க.விற்கு எதிர்காலம் என்ற ஒன்று கிடையாது.
    • தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பேன். கட்சியில் இணைய மாட்டேன்.

    திருப்பூர்:

    ம.தி.மு.க. எதை முன்னிறுத்தி தொடங்கியதோ அதன் நிலை மறந்து சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க ம.தி.மு.க.வை தாய்க்கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் துரை வைகோ சின்னப்பையன் என்றும், அவரது கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன். எனது கடிதம் குறித்து வைகோவிடமிருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பேன் எனவும் துரைசாமி தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி திருப்பூர் ம.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ம.தி.மு.க.வை உடைக்க யார் தூண்டுதலும் கிடையாது. மற்றவர்கள் சொல்லி எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்சி எங்கு இருக்கிறது. அதனை உடைக்க. ம.தி.மு.க. பெருங்காய டப்பா போல காலியாக உள்ளது. ம.தி.மு.க.விற்கு எதிர்காலம் என்ற ஒன்று கிடையாது. கட்சியில் உள்ள இளைஞர்கள் நலன் கருதி இப்போதே தி.மு.க.வில் சேர்த்து விடுவது நல்லது.

    யார் சொல்வதை பற்றியும் எனக்கு கவலை இல்லை. தொழிற்சங்க சொத்துக்கு சண்டை என கூறுகின்றனர்.தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முதல் தொழிற்சங்கத்தை துவங்கியது நான் தான். தொழிற்சங்கத்தை (பைலா) விதிமுறைகள் தான் கட்டுப்படுத்தும். அரசியல் கட்சிகள் இல்லை. சங்கத்தின் பொறுப்பாளர் பெயரில் சொத்துக்கள் இருக்குமே தவிர தனிநபர் பெயரில் இல்லை. ஒருவர் கையெழுத்து போட்டு எதையும் தூக்கி செல்ல முடியாது.விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர்.

    கட்சி துவங்கிய நோக்கம் இன்று இல்லை.ம.தி.மு.க., பலவீனமடைந்து உள்ளது. கிளை கழகம் அமைக்க 100 பேர் உறுப்பினர்களாக தேவை. ஆனால் பொய்யான பெயர்களை பதிவு செய்து ஏமாற்றி வருகின்றனர். பெரியார், அண்ணா கொள்கைகளை வலியுறுத்தி போராடுவேன். தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பேன். கட்சியில் இணைய மாட்டேன். எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் என்னை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என வைகோ சொல்கிறார்.

    இவ்வாறு துரைசாமி கூறினார்.

    Next Story
    ×