search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை அருகே மூதாட்டியை கொன்று வீசிய கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
    X

    மதுரை அருகே மூதாட்டியை கொன்று வீசிய கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது

    • ராஜாமணி திருநகரை சேர்ந்த வசந்தி என்பவருக்கு ரூ. 1 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்திருந்தார்.
    • நகைக்காக மூதாட்டியை கொலை செய்து வீசிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை:

    மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டை காலாங்கரை பகுதியில் கடந்த 12-ந்தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணம்-நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், அவர் மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவரின் மனைவி ராஜாமணி என்பதும், அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியதும் தெரியவந்தது. இதனால் பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதி தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

    ராஜாமணி திருநகரை சேர்ந்த வசந்தி என்பவருக்கு ரூ. 1 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்திருந்தார். அவரிடம் பணம் வாங்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. தனது தாய் மாயமானது குறித்து ராஜாமணி மகன் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    ஆகவே ராஜாமணி கொலையில் வசந்திக்கு தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் நாகமலை புதுக்கோட்டை போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தனது கணவருடன் சேர்ந்து ராஜாமணியை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ராஜாமணியிடம் வசந்தி ரூ. 1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். மேலும் அவருக்கு ரூ. 5 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் இருந்து வந்த அவர், ராஜாமணியை கொலை செய்து, அவர் அணிந்திருக்கும் 28 பவுன் நகையை திருடி விற்க திட்டம் தீட்டினர்.

    இந்நிலையில் பணம் வாங்க வந்த ராஜாமணியை கணவருடன் சேர்ந்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டார். பின்பு மூதாட்டியின் உடலை ஆட்டோவில் ஏற்றி யாருக்கும் தெரியாமல் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியில் வீசிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து வசந்தி, அவரது கணவர் சத்திய மூர்த்தி, ஆட்டோ டிரைவர் வீரபெருமாள் ஆகிய 3 பேரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். நகைக்காக மூதாட்டியை கொலை செய்து வீசிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×